Pages

Monday, August 22, 2011

முதற்படி முதலில் படி! - 38

முதற்படி முதலில் படி!


கடந்த பல வாரங்களாக பங்குச் சந்தை குறித்த அடிப்படை விஷயங்களை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நீண்டகால முதலீட்டை லாபகரமாகச் செய்ய நான் சொல்லி இருக்கும் விஷயங்களே போதுமானவை. சந்தையில் நிகழும் மாற்றங்களை செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் அறிந்து உங்கள் அறிவை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பாதுகாப்பான முறையில் கணிசமான லாபத்தைச் சம்பாதிக்க வாழ்த்துக்கள்! பங்குச் சந்தை தொடர்பான ஆரம்பப் பாடங்கள் முடிந்து விட்ட நிலையில், இனி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்கலாம் என கடந்த இரண்டு இதழ்களில் அறிவித்ததைத் தொடர்ந்து, பல ஆயிரம் வாசகர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்கிறேன்.
இளங்கோ கண்ணன், மதுரை.
என் மகன் இப்போது 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தி, அடிப்படையான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?
''தாராளமாக! இன்னும் சிறு வயதில்கூட அறிமுகப் படுத்தலாம். ஆனால், ஒரு நீண்டகால முதலீட்டாளராக அறிமுகப்படுத்துங்கள்; தினசரி டிரேடராக/ ஸ்பெக்கு லேட்டராக பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தாதீர்கள்! பங்குச் சந்தையை ஒரு விளையாட்டாக விளையாடி குழந்தைகளுக்கு கற்றுத் தர விரும்புகிறவர்கள் http://www.neopets.com/ என்கிற இணையதளத்திற்குள் சென்று ஸ்டாக் மார்க்கெட் என்று தேடினால் உங்களுக்கு அற்புதமான ஒரு விளையாட்டு கிடைக்கும். இதில் உலக நிதிச் சந்தையைப் பற்றிய அறிவையும், அது எவ்வளவு இன்றியமையாதது என்பதையும், அதில் அவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றியும் கற்றுத்தரும்.''
எஸ்.விவேகானந்தன், கரூர்.

நான் வங்கித் துறை, மருத்துவத் துறை பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து வருகிறேன். இந்த என் அணுகுமுறை சரியா?
''ஒரு சாதாரண முதலீட் டாளர் பல துறைகளைச் சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதே சரியான முடிவாகும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, துறைகளின் வளர்ச்சியில் சுழற்சி இருக்கும். உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இன்ஃப்ரா துறை அடிபட்டு இருக்கிறது. அதே சமயத்தில் எஃப்.எம்.சி.ஜி., பார்மா மற்றும் வங்கித் துறைகள் நன்றாக வளர்ந்துள்ளன. அடுத்த சுழற்சியில் இது மாறலாம். எனவே, அதை அறிந்து முதலீடு செய்யவும். நீங்கள் இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பினால், அத்துறை எப்போதெல்லாம் அடிபடுகிறதோ, அப்போது மட்டுமே வாங்கவும். மேலும், இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்யும்போது அவற்றைப் பற்றிய பரிச்சயம் உங்களுக்கு அதிகமாக இருப்பதும் அவசியம்!''
எல்.மாசிலாமணி, திருச்சி-5
நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பங்குச் சந்தை ஓய்வு பெற்றவர்களுக் கானதல்ல என்கிறார்கள். ஆனால், என் நண்பர்கள் பலரும் பங்குச் சந்தையில் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆசையாக இருக்கிறது. நானும் முதலீடு செய்யவா?
''பங்குச் சந்தை முதலீடு பலருக்கும் பல வகைகளில் உதவுகிறது. சில ஓய்வு பெற்றவர்கள் தங்களின் நேரத்தைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நீங்கள் வசதியானவர் (உங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மேல் உங்களிடம் பணம் இருக்கும் பட்சத்தில்) என்றால், பங்குச் சந்தையினால் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்காது என்றால் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். உங்கள் அன்றாட தேவைகளுக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். டே டிரேடிங் கிலும் ஈடுபடாதீர்கள்.''
எம்.அர்ஜுன், சென்னை.
நான் லாங் டைம் இன்வெஸ்டர். '2,500 ரூபாய் கட்டினால் டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லித் தருகிறோம்... நிறைய லாபம் பார்க்க முடியும்’ என்று எனக்கு அடிக்கடி அழைப்பு விடுக்கிறது ஒரு நிறுவனம். இத்தகைய வகுப்புகளுக்கு போவது நல்லதா?
''எத்துறையிலும் அறிவைப் பெருக்கிக் கொள்வது நல்லதே! உங்களிடம் பணம், விருப்பம் மற்றும் நேரம் இருக்கும்பட்சத்தில் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். அதனால் நல்ல லாபம் பார்க்கிறீர்களா இல்லையா என்பதுதான் கேள்வி. முதலில் மேக்ரோ மற்றும் மைக்ரோ எக்கனாமியைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள். பிறகு நிறுவனங்களின் ஆபரேஷன்ஸ் மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராயக் கற்றுக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, டெக்னிக்கல் அனாலிசிஸை கற்றுக் கொள்ளுங்கள். வெறும் டெக்னிக்கல் அனாலிசிஸை மட்டுமே வைத்து பணம் சம்பாதிப்பது கடினமே!''
காயத்ரி சிவராமன், அம்பத்தூர்.
பங்குச் சந்தையில் நான் சொல்கிறபடி முதலீடு செய்யுங்கள். 100% வருமானம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் ஒருவர். அவரை நம்பி 2 லட்ச ரூபாய் பணத்தைப் போடலாமா?
''சில இதழ்களுக்கு முன்பு இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டி ருந்தேன். என்னுடைய பதில், ஒரு போதும் செய்யாதீர்கள் என்பதே! 100% லாபம் சம்பாதிப்பது உறுதி என்றால், அந்த லாபத்தை அவரே சம்பாதித்துக் கொண்டு போகலாமே! மற்றவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதித்துத் தரவேண்டும் என்று அவருக்கு வேண்டுதலா என்ன? சமீபகாலமாக சிலர் இன்னொரு புது டெக்னிக்கையும் பயன்படுத்தி வருகிறார்கள். 100 சதவிகித லாபம் நிச்சயம் என்பதோடு  நிற்காமல், நஷ்டத்தில் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், இதை பத்திரத்தில் எழுதித் தரத் தயார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்த பத்திரத்தை எங்கும் ரிஜிஸ்டர் செய்ய முடியாது. எனவே, நாளைக்கு உங்களுக்கு நஷ்டம் வந்தால் உங்களால் எங்கும் புகார் செய்ய முடியாது. எனவே, ஜாக்கிரதை!''
டி.நவநீத கிருஷ்ணன், காங்கேயம்.
நான் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். டே டிரேடிங்கில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் பார்க்கிறேன். நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக டே டிரேடிங் செய்யலாமா?
''உறுதியாகச் செய்யாதீர்கள்! டே டிரேடிங்கில் தொடர்ந்து சம்பாதித்தவர்கள் உலகில் வெகு சிலரே! அதில் உறுதியாக லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதுநாள் வரை உங்களுக்கு கிடைத்தது தற்செயலான விஷயமாக இருக்கலாம். அதையே சாஸ்வதம் என்று நினைத்து, வேலையை விட்டீர்கள் எனில் மாட்டிக் கொள்வீர்கள்.''
எஸ்.முத்துசாமி, அம்பாசமுத்திரம்.
நான் கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் பங்குச் சந்தை வணிகத்தில் இறங்கினேன். அதுவும் மாதம் மூன்று பங்குகள் என்கிற அடிப்படையில் கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளேன். நீண்ட கால முதலீட்டிற்கு இதே அடிப்படையில், தொடர்ந்து ஒரே நிறுவன பங்குகளை மட்டும் வாங்கினால் சரியான அணுகுமுறையாக இருக்குமா? அல்லது வெவ்வேறு நிறுவன பங்குகளை வாங்கலாமா?
''நிலக்கரி நம் நாட்டிற்கு எப்போதும் தேவையான ஒன்றுதான். அதனால், அந்நிறுவனத்தின் பங்குகள் நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்படும். இருந்த போதிலும் உங்களது ரிஸ்க்கை குறைத்துக் கொள்வதற்காக, கோல் இந்தியா நிறுவனத்தைப் போன்ற பெரிய பங்குகள் இன்னும் சிலவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் (உதாரணத்துக்கு எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி.) உங்கள் ரிஸ்க் குறைந்து, நீண்டகால நோக்கில் நல்ல பலன் கிடைக்கும்.''
முற்றும்.

Sunday, August 14, 2011

முதற்படி முதலில் படி! - 37

முதற்படி முதலில் படி!



பங்குச் சந்தையில் போர்ட்ஃபோலியோ அமைப்பது என்பது முக்கியமான விஷயம். போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்கிற சேவையை சிலர் தனியாகவே தருகிறார்கள். போர்ட்ஃபோலியோ என்றால் என்னவென்று முதலில் பார்த்து விடுவோம்.
முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது ஒரே நபரால் சேகரிக்கப்படும் பலவிதமான முதலீட்டு உபகரணங்கள் ஆகும். உதாரணத்திற்கு ஒரே நபர், பங்குகளில் முதலீடு செய்திருப்பார், பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்திருப்பார். இது தவிர, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, கடன் பத்திரங்கள், டெபாசிட்டுகள் என இன்னும் பலவற்றிலும் முதலீடு செய்திருப்பார். இவை அனைத்தையும் சேர்த்துத்தான் ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ உருவாகிறது.
நம் சாப்பாட்டில் கூட்டு, பொரியல், கறி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், உப்பு, சாதம் எல்லாம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே சாப்பாடு ருசிக்கும். அதுபோல, நம் போர்ட்ஃபோலியோவில் அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருந்தால் மட்டுமே,
நம் முதலீடு பாதுகாப்பானதாக அமையும். இந்த போர்ட்ஃபோலியோவும் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் நெய், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், வயதானவர்களும் அதே மாதிரி இனிப்பையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட முடியுமா? வயதுகேற்ப உணவு வகைகள் மாறுகிற மாதிரி நம் போர்ட்ஃபோலியோவும் அமைய வேண்டும்.
நான் சந்திக்கும் பல முதலீட்டாளர்கள் இன்றைய தினத்தில் ரியல் எஸ்டேட்டில் தங்கள் முழுப் பணத்தையும் போட்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு வீட்டுமனையை அல்லது விளைநிலத்தை முதலீடாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அதில் பலர் அடுத்த ஐந்து வருடத்தில் காலேஜில் சேரப் போகும் தனது குழந்தையின் படிப்புச் செலவுக்காக இன்னுமொரு நிலத்தை/பிளாட்டை வாங்கிப் போடலாமா என்று கேட்கிறார்கள்.
இது ஒருபக்கமெனில், மற்றொரு பக்கத்தில் வருடா வருடம் கட்ட வேண்டிய இன்ஷூரன்ஸ் தொகையை குழந்தையின் பள்ளிக்கூட கட்டணத்தை சேகரிப்பதற்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருட எஸ்.ஐ.பி. போட்டு, அதை எடுத்து இன்ஷூரன்ஸ் தொகையை/பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டிவிடலாமா என்று யோசனை கேட்கிறவர்களும் உண்டு.
இன்னுமொரு வகையினர் 30 - 40 வயதுக்குட்பட்டவர்கள். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி போன்ற முதலீடு அனைத்துமே வீண். எதில் முதலீடு செய்தாலும் ரிஸ்க் - எனது பணம் எல்லாம் வீணாகிப் போய்விடும். ஆகவே, நான் எனது எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் அஞ்சலகத்தின் மூலமே சேமிக்கிறேன் என்று சொல்கிறவர்களும் உண்டு.

சொல்லப் போனால், மேற்கண்ட ஒவ்வொரு வகையினரும் மிகச் சரியானது என்று நினைத்துக் கொண்டு தவறான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முழுச் சாப்பாட்டில் நாம் எவ்வாறு அயிட்டங்கள் கணகச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது போலத்தான் நமது போர்ட்ஃபோலியோவும் இருக்க வேண்டும். உங்களது தேவைகளுக்கு ஏற்ப உங்களின் முதலீடு அமைய வேண்டும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், வீடு, ஓய்வுகால வாழ்க்கை, தருமம் போன்றவற்றிற்காக சேமிப்பதை முறையாக ஒரு போர்ட்ஃபோலியோ வரையறைக்குள் சேமியுங்கள்/முதலீடு செய்யுங்கள். அதுபோல உங்களின் செல்வம் வளர வேண்டும் என்றாலும் ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.
உங்களது அன்றாடத் தேவைகளை மூன்று காலகட்டத் திற்குள் அடக்கலாம். அவை முறையே குறுகிய காலத் தேவைகள், நடுத்தர காலத் தேவைகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள். தேவைக்கு ஏற்றாற் போல் உங்களின் முதலீடுகளும் அமைய வேண்டும்.
தேவைகள்
முதலீட்டு வகை (தேவை மற்றும் கால அளவைப் பொறுத்து கீழ்க்கண்ட முதலீடுகளை மேற்கொள்ளலாம்)
குறுகிய காலத் தேவைகள் (மூன்று வருடத்திற்குள்)
சேவிங்ஸ் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட்.
நடுத்தர காலத் தேவைகள் (4 - 7 வருடங்கள்)
எம்.ஐ.பி., பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுஃபண்டுகள், இ.டி.எஃப், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள். தங்கம்/வெள்ளி.
நீண்ட காலத் தேவைகள் (ஏழு வருடங்களுக்கு மேல்)
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்/பங்குகள், இ.டி.எஃப்., ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, சொந்தத் தொழில் அல்லது தொழில் சார்ந்த முதலீடுகள், ஆர்ட் மற்றும் கலெக்டர்ஸ் அயிட்டங்கள்.
மேலே ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ற முதலீட்டு வகைகளைப் பார்த்தோம்.
கீழே உங்களின் வயதிற்கேற்ற முதலீட்டு போர்ட்ஃபோலியோவைப் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத் தினர் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள் நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்.
2. கடன் சார்ந்தமுதலீடுகள்.
3. ரியல் எஸ்டேட்.
4. தங்கம்/வெள்ளி.
மேற்கண்டவாறு உருவாக்கிய உங்களின் போர்ட்ஃபோலியோவை ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு ஒரு வரையறைக்குள் முதலீடு செய்யும்போது, நீங்கள் சில லாப வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனால் உங்கள் செல்வத்தை இழக்க வாய்ப்பில்லை. முதலீடு என்பது முதலில் பாதுகாப்பைத் தர வேண்டும் - அதற்குமேல் வருமானத்தைத் தர வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உங்கள் முதலீட்டு பயணத்தைத் தொடங்குங்கள்!
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, August 8, 2011

இன்ஷூரன்ஸ் பாலிசி ரேட்டிங்! - பென்ஷன் பிளான் (யூலிப்) - 2

முதற்படி முதலில் படி! - 36

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

எஃப் அண்ட் ஓ. முதல் என்.சி.டி. வரை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல்வேறு விஷயங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை கட்டுப்பாடுகளைக் (ரெகுலேஷன்) குறித்துப் பார்ப்போம்.  
லக அளவில் மிகச் சிறந்த கட்டுப்பாட் டோடு செயல் படும் பங்குச் சந்தைகளில் நம் இந்திய பங்குச் சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் பங்குகளை வாங்கி, விற்பதில் வெளிப்படையான (டிரான்ஸ் பரன்ட்) தன்மை நிலவுகிறது. பங்கு வாங்கி/விற்ற அன்றே எஸ்.எம்.எஸ்., கான்ட்ராக்ட் நோட் என அனைத்தும் வந்து விடும். பங்குகளை வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ நீங்கள் பணம் கொடுத்துவிட வேண்டும். விற்ற இரண்டாவது நாள், உங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துவிட வேண்டும். உங்கள் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளும் வசதி, குறிப்பிட்ட உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமெட்டிக்காக டிவிடெண்ட் மற்றும் பேஅவுட் பெறும் வசதி, நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை நேரடியாக (புரோக்கர் வெப்சைட் தவிர) என்.எஸ்.டி.எல்/ சி.டி.எஸ்.எல்.
வெப்சைட் மூலமாகப் பார்த்துக் கொள்ள வசதி என பல விஷயங்கள் வந்துவிட்டன.
இவ்வளவு வெளிப்படைத் தன்மை இருந்தும், பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இன்றும் பல முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பங்கு களை வாங்கும் போதும், விற்கும்போதும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.
1. உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் டிரேடிங் செய்த போதெல்லாம் உங்களுக்கு தகவல் வரும். மேலும், உங்கள் டீமேட் கணக்கில் இருந்து பங்குகள் உங்களுக்குத் தெரியாமலே விற்கப்பட்டாலும் உங்களுக்குத் தகவல் வந்துவிடும்.
2. இ-மெயில் மற்றும் இன்டர்நெட் வசதி இன்று பங்கு முதலீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆகவே, இ-மெயில் அக்கவுன்ட் இல்லையெனில், ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வர்த்தகம் செய்யும் போதெல்லாம், உங்களுக்கு கன்பஃர்மேஷன் மெயில் மற்றும் கான்ட்ராக்ட் வந்துவிடும்.
3. புரோக்கரிடம் உள்ள உங்கள் லெட்ஜர் அக்கவுன்டில் பணத்தை விட்டு வைக்காதீர்கள். நீங்கள் விற்க, விற்க ஆட்டோமெட்டிக்காக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்லுங்கள். அதுபோலவே, பங்குகளை வாங்கிய அளவிற்குப் பணத்தை சரியாகக் கொடுத்துவிடுங்கள்.

4. பவர் ஆஃப் அட்டார்னி புரோக்கரிடம் கொடுக்காமல், நீங்கள் ஒவ்வொரு தடவையும் செக் (காசோலை) போல டீமேட் ஸ்லிப் எழுதிக் கொடுக்கலாம்.  நீங்கள் ஆக்டிவ் வான முதலீட்டாளர் இல்லை எனில், இம்முறை உங்களுக்கு சரிப்பட்டு வராது.
5. டிரேடிங் அக்கவுன்டை ஒரு இடத்திலும், டீமேட் அக்கவுன்டை வேறொரு இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதிலும் அசௌகரியங்கள் அதிகம்.
6. நீங்கள் பங்குச் சந்தை பற்றி முற்றிலும் அறிந்தவர் எனில், எங்கு வேண்டுமானாலும் உங்கள் அக்கவுன்டை இன்டர்நெட் மூலம் திறந்து அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள். பங்குச் சந்தை பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர் எனில், ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை திறந்து கொள்வது நல்லது.
7. எந்த ஒரு முதலீட்டிற்கும் கண்காணிப்பு என்பது அவசியம். அதை மனதில் கொண்டு, அவ்வப்போது உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை கண்காணித்துக் கொள்ளுங்கள்.
8. எவரேனும் உங்களை அணுகி நீங்கள் லட்ச ரூபாய் முதலீடு செய்யுங்கள். நான் மாதத்திற்கு 5% அல்லது 10% பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்துத் தருகிறேன் என்று கூறினால், நம்பாதீர்கள்! அப்படி நம்பினீர்கள் எனில் நீங்கள் ஏமாறுவது உறுதி!
9. எக்காரணம் கொண்டும் புரோக்கிங் நிறுவனத்தில் வேலை செய்யும் டீலர்களிடம் உங்களது அக்கவுன்டை அவரே ஆப்ரேட் செய்து, சம்பாதித்துத் தருமாறு கூறாதீர்கள்.
10. குறைந்தது ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், நீங்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு, விற்றது எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்ற கணக்கைப் பாருங்கள். 
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் பின்பற்றிய பின்பும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்  என்றால், என்ன செய்யலாம் என்பது பற்றி கீழே பார்ப்போம்.
நீங்கள் சொல்லாமலே, உங்கள் புரோக்கர் ஒரு பங்கை வாங்கி/விற்றுவிட்டார் எனில்,  ஒவ்வொரு புரோக்கரிடமும் கம்ப்ளையன்ஸ் ஆபீஃஸர் என்று ஒருவர் இருப்பார். அவருக்கும், பிராஞ்ச் மேனேஜருக்கும் உங்கள் புகாரை உடனடியாக இ-மெயிலில் அனுப்புங்கள். மேலும், உங்கள் புகாரை கடிதம் எழுதி புரோக்கரிடம் கொடுங்கள். அக்கடிதம் கொடுத்ததற்கான அத்தாட்சியையும் பெற்றுக் கொள்ளுங்கள். இதன்மூலம், உரிய தருணத்தில் நீங்கள் புகார் சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வருவதைத் தடுக்க முடியும். அந்த புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், மேற்கொண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்குப் புகாரை அனுப்பலாம்.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) தனது இணைய  தளத்தில் புகார் செய்வது பற்றிய விவரங்களை தெளிவாகத் தந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். தபால்/கூரியர் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். அதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தி லேயே உள்ளன.
தவிர, தேசிய பங்குச் சந்தை சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் முதலீட்டாளர் சேவை மையங்களை அமைத்துள்ளது. அம்மையங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னை களுக்குத் தீர்வு காணலாம். அதுபோல, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) அதன் புரோக்கர்கள் மீது  புகார் செய்வதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. விவரங்கள் அதன் இணையதளத்தில் உள்ளது.
பங்குச் சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள பங்கு நிறுவனங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தாலும், பங்குச் சந்தை புகார் மையத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். பொதுவாக பெரிய, தரமான நிறுவனப் பங்குகளை வாங்கும்போது இது மாதிரியானப் பிரச்னைக்கு இடம் இல்லை.
நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் புரோக்கரிடம் அல்லது பங்குச் சந்தையிடம் புகார் செய்யும்போது, செபிக்கும் ஒரு நகல் அனுப்புவது நல்லது. செபி-யின் இணையதளத்தில் புரோக்கர் குறித்த புகார்களை ஏற்றுக் கொண்டு சரி செய்ய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனி செல்கள் நியமிக்கப் பட்டுள்ளன. நமது தென் பிராந்தியத்திற்கான செபி அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ளது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, August 1, 2011

மந்த்லி இன்கம் பிளான்: அதிக வருமானம், குறைந்த வரி!

மந்த்லி இன்கம் பிளான்: அதிக வருமானம், குறைந்த வரி!


வங்கிகளில் நாம் போட்டு வைத்திருக்கிற ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு  ஒவ்வொரு மாதமும் வட்டி வருகிற மாதிரி, மியூச்சுவல் ஃபண்டில் போடும் பணத்திற்கும் மாதா மாதம் வருமானம் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி நினைக்கிறவர்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதுதான் 'மன்த்லி இன்கம் பிளான்’. மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் பல்வேறு வகைகளில் இந்த மன்த்லி இன்கம் ஃபண்டும் ஒன்று.
எல்லா மாதமும் கிடைக்குமா?
பெயரிலேயே 'மன்த்லி இன்கம்’ என்று இருப்பதால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. பல மாதங்களில் கொடுப்பார்கள்; சில மாதங்களில் கொடுக்காமல்கூட இருக்கலாம். ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தே டிவிடெண்ட் தரப்படும். சந்தை இறங்கும் சமயத்தில் வருமானம் இல்லாமல் போகும் என்பதால், அந்த மாதத்தில் டிவிடெண்ட் கொடுக்க மாட்டார்கள்.
ஆப்ஷன்கள்!
இந்த ஃபண்டுகளில் மாதாந்திர டிவிடெண்ட், காலாண்டு டிவிடெண்ட் போன்ற ஆப்ஷன்கள் இருக்கிறது. நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வுசெய்து கொள்ளலாம். டிவிடெண்ட் வேண்டாம் என்கிறவர்கள் குரோத் ஆப்ஷனை தேர்வு செய்து, பிற்பாடு மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை, பெரும்பாலும் கடன் சார்ந்த திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவு தொகை மட்டுமே ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சுமார் 25 சதவிகித அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
வருமானம் எப்படி?
சுமார் 75% கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்டுகளில் வருமானம் ஓரளவுக்கு நிலையானதாகவே இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகள், கடந்த ஐந்தாண்டுகளில் 10 சதவிகித வருமானம் தந்திருக்கிறது. சில ஃபண்டுகள் கடந்த மூன்றாண்டுகளில் 14 சதவிகித ஆண்டு வருமானமும் கொடுத்திருக்கின்றன.

யாருக்கு ஏற்றது?
* வங்கி வட்டியைவிட கொஞ்சம் அதிக வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு...
* ஓரளவுக்கு மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும் என்று நினைக்கிறவர்களுக்கு...
* சீனியர் சிட்டிசன்களுக்கு!
இந்த ஃபண்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டிற்கு வரி (டிவிடெண்ட் விநியோக வரி) இருக்கிறது. ஆனால், இந்த வரியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டிவிடும் என்பதால், முதலீட்டாளர்கள் தனியாக வரி எதுவும் கட்டத் தேவையில்லை.
குறுகியகால மூலதன ஆதாய வரி!

அதிக அளவு தொகையை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என்ன வரி விகிதமோ, அதையே இங்கும் செலுத்த வேண்டி இருக்கும்.
ஒரு வருட காலத்திற்குள் விற்கும்போது லாபத்திற்கு இந்த வரியைச் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களது வருமான வரி எல்லைக்கு ஏற்ப இந்த வரியை செலுத்த வேண்டி இருக்கும். அதனால் அதிக வரி வரம்பிற்குள் இருப்பவர்கள், ஒரு வருட காலத்தில் எம்.ஐ.பி.யில் இருந்து வெளியேறுவது பயன் தருவதாக இருக்காது.
நீண்டகால மூலதன ஆதாய வரி!
ஒரு வருடத்துக்குப் பிறகு விற்கும்போது, லாபத்தில் 10 சதவிகித வரி அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20 சதவிகித வரி உண்டு. இதில் எது குறைவோ அதை வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட்டை
விட அதிக வருமானம்; வருமான வரியும் குறைவு என்பது இந்த ஃபண்டின் கவர்ச்சிகரமான விஷயம்.  தங்கள் போர்ட் ஃபோலியோவில் கடன் சார்ந்த முதலீடு வேண்டும் என்பவர்கள் இந்த ஃபண்டை தாராளமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.
- வா.கார்த்திகேயன்.


Source - Vikatan Magazine

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

சேமிப்பதிலும் சரி, செலவு செய்வதிலும் சரி, நம்மூர் பெண்கள் கில்லாடிகள்தான்! இப்போது வருமான வரி விஷயத்திலும் வெளுத்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிச் சேமிப்புக்கான வழிகளை சரியாக இனம்கண்டு அதைப் பயன்படுத்துவதிலும் புலிகளாகிவிட்டார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் 'டாக்ஸ் ஸ்பேனர்’ எனும் நிறுவனம் சுமார் 500 இந்திய நிறுவனங்களில் ஓர் ஆய்வை மேற்கொண்டபோது, வரி விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் மிகத் தெளிவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்களின் வரி விகிதம் (சம்பளத்தில், செலுத்தும் வரியின் விகிதம்) சராசரியாக 4 சதவிகிதமாக உள்ளது.
அதே சமயத்தில் ஆண்களின் வரி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் இந்த நிலவரம் ஒருபக்கம் இருக்க, நம்மூர் பெண்கள் எப்படி இருக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒரு சோறு பதமாக மூன்று பெண்களைச் சந்தித்தோம்... உண்மையிலேயே அசர வைத்துவிட்டார்கள்!
டைட்டன் ஷோரூம் பிரான்ச்சைஸி உரிமையாளர்:
''வருமான வரி விஷயத்துல நான் எப்பவும் கவனமா இருப்பேன். சொந்தமா வீடு கட்ட முடிவு செஞ்சப்ப, அதுக்குத் தேவையான பணம் இருந்தாலும், வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் வாங்கினேன். கையில இருந்த பணத்தை வச்சுகிட்டு பிஸினஸை விரிவுபடுத்தினேன்.
வீட்டுக் கடன் தவிர, அரசு கடன் பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மியூச்சுவல் ஃபண்டுகள்னு வரிச் சலுகைக்கான முதலீடுகளாகப் பார்த்து பணத்தைப் போட்டிருக்கிறேன்!''
உஷா நாராயணன், தனியார் நிறுவன ஊழியர்:
''எனது கணவர் இருந்த வரை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்தான் பார்த்துக் கொள்வார். ஆனால், அவர் மறைந்த பிறகு நானே வரி சேமிப்பை திட்டமிடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கான வரிச் சலுகை என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் பிளான் செய்து முதலீடு செய்கிறேன். பி.பி.எஃப்., இன்ஃப்ரா பாண்டு பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மெடிக்ளைம், இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு அப்படின்னு ஏறக்குறைய வரி கட்டத் தேவையில்லாத அளவுக்கு நடந்துகொள்கிறேன். நான் வரிச் சலுகை இல்லாத ஒன்றில் முதலீடு செய்கிறேன், அது தங்கத்தில் மட்டும்தான்!''
அனுராதா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்:
''வரி சேமிப்பு விஷயத்தில் முன்பு எனக்கு ஆர்வமில்லை. ஆனால், இப்ப பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே, டி.வி. முன்னால் உட்கார்ந்து என்னென்ன வரிச் சலுகைகள் அறிவிக்கிறார்கள் என பார்த்து குறித்து வைத்துக் கொள்வேன். அதற்குத் தகுந்தாற்போல் நிதி ஆண்டின் தொடக்கத்திலே எவ்வளவு வருமானம் வரும் என கணக்கிட்டு, அதற்கேற்ப முதலீடு செய்வேன். இப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு, வரிச் சேமிப்பு திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்த திட்டங்களும் நல்ல லாபம் கொடுப்பதாக இருக்கிறதா என்று பார்ப்பேன். வரி சேமிப்பிற்காக நஷ்டப்பட முடியாதில்லையா?''
இனியாவது, வரிக் கணக்கை பெண்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாமே!
-பானுமதி அருணாசலம்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

சித்ரா சிவக்குமார்,

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 35

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

பங்குச் சந்தையில் பங்குகள் மட்டும்தான் வர்த்தகமாகிறதா என்றால் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பங்குகள் மட்டுமே வர்த்தகமாகியிருக்கலாம். ஆனால், இன்றோ பல்வேறு விஷயங்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  
1. பங்குகள், 2. இ.டி.எஃப்., 3. எஃப் அண்ட் ஓ., 4. கரன்ஸி, 5. என்.சி.டி., 6. வாரண்ட், 7. ஐ.டி.ஆர்., 8. கடன் பத்திரங்கள், 9. மியூச்சுவல் ஃபண்டுகள்.
பங்குகளைப் பற்றி கடந்த பல இதழ்களாகப் பார்த்தோம். இ.டி.எஃப்-ஐயும் கடந்த இதழில் பார்த்தோம். மற்றவற்றைப் பற்றி சுருக்கமாக இந்த இதழில் பார்ப்போம்.
எஃப் அண்ட் ஓ (Futures & Options). இவை இரண்டும் சேர்த்து பொதுவாக 'டெரிவேட்டிவ்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டும் ஒருவிதமான ஃபைனான்ஷியல் கான்ட்ராக்ட் ஆகும். நீங்கள் பங்குகளை விலைக்கு வாங் கினால், அவற்றை வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆனால்,
எஃப் அண்ட் ஓ-வில் பங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்களை நாம் விலைக்கு வாங்குகிறோம். அதாவது, ஃபியூச்சர்ஸில் - எதிர்காலத்தில் வாங்கப் போகும்/விற்கப் போகும் ஒன்றிற்கு இன்றே விலையை நிர்ணயித்துக் கொள்வதே ஃபியூச்சர்.
ஆப்ஷன்ஸ் சற்று மாறுபட்டது. ஒரு பங்கை குறிப்பிட்ட விலைக்கு வாங்குகிறேன்/விற்கிறேன் என்கிற ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சிறுதொகையை அட்வான்ஸாகக் கட்டி விடுவது. இதில் என்ன வசதி என்றால், நாம் ஒப்பந்தம் செய்து கொண்ட விலை நமக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே நாம் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அட்வான்ஸாகக் கட்டிய சிறிய தொகையை, போய்த் தொலை கிறது என்று அப்படியே விட்டுவிடலாம். இதில் கால் ஆஃப்ஷன், புட் ஆஃப்ஷன் என இரண்டு வகை உண்டு.
இந்த எஃப் அண்ட் ஓ சிலருக்கு சில வகைகளில் உதவிகரமாக இருக்கும். நீண்டநாள் முதலீட்டாளர் தங்கள் லாபத்தைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி இந்த எஃப் அண்ட் ஓ. ஆனால், சிறு முதலீட்டாளர் கள் பணத்திற்கு ஆசைப்பட்டு விஷயம் தெரியாமல் இதில் இறங்கினால் கையை சுட்டுக் கொள்ள நேரிடலாம்!
கரன்ஸி: கரன்ஸி டெரிவேட்டிவ்களும் இந்திய பங்குச் சந்தைகளில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப் பட்டு வர்த்தகமாகி வருகிறது. இதுவும் ஒரு ஹை ரிஸ்க்கான விஷயம்தான். விஷயம் தெரியாத முதலீட்டாளர்கள் வெறும் யூகத்தை அல்லது அதிர்ஷ்டத்தை நம்பி இறங்கினால், ஆபத்தே வரும். ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் இதுபோன்ற டெரிவேட்டிவ் வர்த்தகத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், நீங்கள் ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அல்லது உங்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பாதுகாத்துக் கொள்ள, கரன்ஸி டெரிவேட்டிவ் மூலம் உங்கள் லாபத்தை அல்லது நஷ்டத்தை ஈடு செய்யலாம்.
என்.சி.டி. (NCD - Non Convertible Debentures): சமீப காலமாக மிகவும் பாப்புலராகி வருகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள உபகரணமாகும். என்.சி.டி. என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் பலவும் செக்யூர்ட் என்.சி.டி-கள் (Secured NCD) ஆகும். இந்த செக்யூர்ட் என்.சி.டி-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு உத்தரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் நிரந்தர வைப்பு நிதிகள் (Fixed Deposits) மூலம் நிதி திரட்டுகின்றன. அந்த வைப்பு நிதிகள் அன்செக்யூர்ட் என்.சி.டி.கள் (Unsecured) ஆகும்.

பொதுவாகத் தற்சமயம் வெளிவரும் டிபஞ்சர்கள் ரூ.1,000 முகமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும். இந்த என்.சி.டி-கள் வெளியீடு முடிந்தவுடன், பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகமாகின்றன. ஒவ்வொரு நாளும் அதன் விலை, அன்றைய வட்டி விகிதம், முதிர்வு தேதி, வெளியிட்ட நிறுவனத்தின் அன்றைய நிதி நிலைமை போன்ற பலவற்றின் அடிப்படையில், சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குகளை வாங்கி விற்பது போல் இந்த என்.சி.டி-களையும் வாங்கி விற்கலாம். டீமேட் கணக்கில் இந்த என்.சி.டி.கள் இருப்பதால், மூலத்தில் வருமான வரி பிடிப்பு ஏதும் இல்லை என்பது இதிலுள்ள கூடுதல் அட்ராக்ஷன்.
என்.சி.டி-களை வாங்கி, முதிர்வு வரை வைத்திருப்ப வர்களுக்கு சந்தை ரிஸ்க் ஏதும் இல்லை. அதே சமயத்தில், தங்களது தேவைகளுக் காக, முதிர்வு தேதிக்கு முன்பு சந்தையில் விற்கச் செல்லும் போது அன்றைய வட்டி விகிதத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற - இறக்கம் இருக்கும். இதுபோன்ற உபகரணங்களில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக சந்தையில் விற்க வரமாட் டார்கள். எனவே, சந்தையில் வர்த்தகம் ஆகும் அளவு குறைவாக இருக்க வாய்ப்புண்டு. இதனால் லிக்விட்டி ரிஸ்க் ஏற்பட வாய்ப்புண்டு.
வாரண்ட்ஸ்: உரிம வாரண்டுகளை நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை பங்குகளாக மாற்றப்படும். அந்த காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனங்கள் அவற்றை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன. அவ்வாறு லிஸ்ட் செய்யப்பட்ட நல்ல தரமான வாரண்டுகளை விவரமறிந்து வாங்கி முதலீட்டாளர்கள் லாபமடையலாம்.
ஐ.டி.ஆர் (IDR – Indian Depository Receipt): இந்திய நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஏ.டி.ஆர்-ஆக (ADR – American Depository Receipt) அமெரிக்க பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன.  அதேபோல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை இந்திய பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்வதே ஐ.டி.ஆர். அவ்வாறு சமீபத்தில் லிஸ்ட் செய்யப்பட்டது ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியின் ஐ.டி.ஆர். வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைக்கிறவர்கள் இந்த ஐ.டி.ஆர். என்ன விதமான வருமானம் கொடுத்திருக்கிறது என்று பார்த்து விட்டு வாங்கலாம்.
கடன் பத்திரங்கள்: அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. இதில் 'ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல்’ மார்க்கெட் என இரு வகை உள்ளது. நம் நாட்டில் கடன் பத்திரங்களுக்கான மார்க்கெட் இன்னும் அவ்வளவு பிரபலமடையவில்லை. செபி-யும் கடன் பத்திரச் சந்தையை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் நம் கடன் பத்திரச் சந்தை இன்னும் முளைகூட விடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்: பங்குச் சந்தை மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தி ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், பல அசௌகரியங்களால் இத்திட்டம் சூடு பிடிக்கவில்லை. பங்குச் சந்தை மூலம் நடைபெறும் மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகம் மிக மிகக் குறைSவே! ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதே சிறந்தது!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine