Pages

Tuesday, July 12, 2011

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 32

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

சென்ற வாரத்தில் 'காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி’ மற்றும் 'டிஸ்கவுன்ட் ரேட்’டை கண்டுபிடித்தோம். இவ்வாரம் 'டெர்மினல் வேல்யூ’வை கண்டுபிடித்து, அதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பைக் கண்டுபிடிப்போம்.
நாம் சென்றவாரம் கூறியதுபோல, நிறுவனம் என்பது வயதில்லாதது. எப்போதும் பணத்தை ஈட்டிக் கொண்டிருக்கும். ஆனால், நாம் கண்டுபிடித்த 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ அடுத்த ஐந்து வருடங்களுக்குத்தான். அதற்குப் பிறகு வரப்போகும் 'கேஷ் ஃப்ளோ’வை கணக்கிடுவதற்குத்தான் 'டெர்மினல் வேல்யூ’வை கண்டுபிடிக்கிறோம். இந்த வேல்யூவைக் கணக்கிடுவதற்கு பலவிதமான முறைகள் இருந்தாலும், மிகவும் பரவலாக உபயோகிக்கப்படுவது 'கோர்டன் குரோத் மாடல்’ (Gordon Growth Model) என்பதாகும். அம்முறையை உபயோகித்து 'டெர்மினல் வேல்யூ’ கண்டுபிடிப்பதற்கான ஃபார்முலா கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 'டெர்மினல் வேல்யூ’வை கணக்கிடுவதற்கு நமது ஐந்தாவது வருட 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ புரஜெக்ஷனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டெர்மினல் வேல்யூ =
[கணிக்கப்பட்ட கடைசி வருட ஃப்ரீ கேஷ் ஃப்ளோ X (1 + நீண்ட கால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்)] / [டிஸ்கவுன்ட் ரேட் - நீண்ட கால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்]
மேற்கண்ட ஃபார்முலாவில் தமிழ்நாடு கூரியரின் (கடைசி வருட) மார்ச் 31, 2016-ம் ஆண்டின் கணிக்கப்பட்ட 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ .5.23 கோடி ( 523 லட்சம்) ஆகும். டிஸ்கவுன்ட் ரேட் சென்றவாரம் 15.41% என்று கண்டுபிடித்தோம். அடுத்த ஐந்து வருடங்களில் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவின் 'குரோத் ரேட்’ கிட்டத்தட்ட 16% என்று நாம் ஃபோர்காஸ்ட் செய்துள்ளோம். ஆனால், அதே 'குரோத் ரேட்’ எக்காலத்திலும் இருக்குமா என்றால், சந்தேகமே! ஆகவே, 'நீண்டகால கேஷ் ஃப்ளோ குரோத் ரேட்’டை நாம் 8% என வைத்துக் கொள்வோம். இந்த விவரங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'டெர்மினல் வேல்யூ’ இதோ:
டெர்மினல் வேல்யூ
= [5.23 ஜ் (1 + 8%)] /
  [15.41% - 8%]
= [5.23 ஜ் 1.08] / [0.0741]
= 76.23 கோடி
மார்ச் 31, 2016-ற்கு அப்பாற்பட்ட ஃப்ரீ கேஷ் ஃப்ளோவின் மதிப்பு 76.23 கோடி என்று கண்டுபிடித்து விட்டோம். இப்போது நாம் சில இதழ்களுக்கு முன்பு கண்டுபிடித்த மார்ச் 2016-வரைக்குமான ஃப்ரீ கேஷ் ஃப்ளோவிற்கும், மேலே கண்டுபிடித்த டெர்மினல் வேல்யூவிற்கும் நிகழ்கால மதிப்பை (என்.பி.வி அல்லது நெட் பிரஸன்ட் வேல்யூ), 15.41% என்று நாம் கண்டுபிடித்த டிஸ்கவுன்ட் ரேட்டை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும்.
சில இதழ்களுக்கு முன்பு டிஸ்கவுன்ட் ரேட்டை உபயோகித்து என்.பி.வி கண்டுபிடிப்பது குறித்து விவரமாக கண்டோம். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் புரோகிராமின் உதவியுடன் இந்த என்.பி.வி-யைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட என்.பி.வி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2012 முதல் மார்ச் 2016 வரை உள்ள ஐந்து வருட கேஷ் ஃப்ளோ மற்றும் டெர்மினல் வேல்யூ ஆகியவற்றின் என்.பி.வி 44.91 கோடியாகும். இதற்காக நாம் உபயோகித்த டிஸ்கவுன்ட் ரேட் 15.41% ஆகும். இது நிறுவனத்தின் மொத்த மதிப்பாகும். இதிலிருந்து நிறுவனம் வாங்கியிருக்கும் மொத்தக் கடனை நாம் கழித்தால் கிடைப்பதுதான் ஷேர் ஹோல்டர் ஈக்விட்டியின் மதிப்பு. நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் 3.53 கோடி கடன் வாங்கியுள்ளது என சென்ற இதழில் பார்த்தோம். ஆக, ஷேர் ஹோல்டர் ஈக்விட்டியின் மதிப்பு = 44.91 - 3.53 = 41.38 கோடியாகும்.
நாம் சென்ற இதழில் தமிழ்நாடு கூரியர் கம்பெனியின் பங்கு மூலதனம் 5.30 கோடி என்று பார்த்தோம். அதாவது, 10 முகமதிப்பைக் கொண்ட 53 லட்சம் (0.53 கோடி) பங்குகளை வெளியிட்டுள்ளது. நாம் நிறுவனத்தின் ஈக்விட்டி மதிப்பு .41.38 கோடி என்று கண்டுபிடித்துள்ளோம். ஆக, ஒரு பங்கின் மதிப்பு = 41.38/ 0.53 = 78.08 ஆகும்.
நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி மதிப்பை, வெளியிட்டுள்ள பங்குகளால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு ஷேரின் மதிப்பு. நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனியின் ஒரு பங்கின் நியாயமான மதிப்பு 78.08 ஆகும். இதையே 'இன்ட்ரின்ஸிக் வேல்யூ’ (intrinsic value) என்றும் கூறலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்குகிறார்களோ அவ்வளவு நன்று.
பங்குகளை மதிப்பிடும் பல்வேறு வேல்யூவேஷன் முறைகளைப் பற்றி போதுமான அளவு சொல்லி விட்டேன். இனிவரும் வாரங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வியூகங்கள், போர்ட்ஃபோலியோ, ரெகுலேஷன் போன்ற பலவற்றைப்பற்றியும் விரிவாகக் காண்போம்.
(படி ஏறுவோம்)



பியானியின் அடுத்த பிளான்!
ரீடெய்ல் துறையின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கிஷோர் பியானியின் பாண்டலூன். கடந்த ஒரு வருட காலமாக மற்ற போட்டி ரீடெய்ல் நிறுவனங்கள் ஏறுமுகத்தில் இருக்கும்போது, இந்த நிறுவனம் மட்டும் சரிவிலேயே இருக்கிறது. காரணம், இந்நிறுவனத்துக்கு இருக்கும் ஏராளமான கடன்கள்தான்.
இந்நிலையில் திடீரென கடனை அடைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பியானி. இதற்காக 'ஃபியூச்சர் கேபிட்டல் ஹோல்டிங்’ நிறுவனத்தில் பாண்டலூன் முதலீடு செய்திருக்கும் 54 சதவிகித பங்குகளை விற்க முடிவு செய்திருக் கிறார். 'ஃபியூச்சர் கேபிட்டல் ஹோல்டிங்’ நிறுவனமும்  'பாண்டலூன் ரீடெய்ல்’ நிறுவனமும் ஃபியூச்சர் குழுமத்தின் அங்கங்கள்தான்!
இதற்கிடையே பாண்டலூன் நிறுவனத்தின் கடனைக் குறைப்பதில் பியானி காட்டும் ஆர்வத்துக்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள்... விரைவில் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு அரசு பச்சைக்கொடி காட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரீடெய்ல் வட்டாரத்தில் பலமாக இருக்கிறது. அப்படி அனுமதி கிடைத்துவிடும்பட்சத்தில், கடனில் தவிக்கும் பாண்டலூனில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் போய்விடக்கூடும் என்பதால்தான் இந்த வேகம் காட்டுகிறார் பியானி. பிழைக்கத் தெரிந்த பிஸினஸ்மேன்தான்!

வா.கார்த்திகேயன்.

 
Source - Vikatan Magazine

No comments: