முதற்படி முதலில் படி!
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சில வாரங்களுக்கு முன்பு பேஸிவ் இன்வெஸ்டிங் முறை பற்றி பார்த்தோம். அம்முறையின் ஒரு பகுதிதான் இ.டி.எஃப். என்று சொல்லப்படுகிற 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு’கள். அதுபற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
உலக அளவில் இ.டி.எஃப்- களின் வரலாறு மிகக் குறுகியது. கடந்த 20 வருடங்களாகத்தான் இ.டி.எஃப்-கள் நடைமுறையில் உள்ளன. இருந்தபோதிலும் வளர்ந்த நாடுகளில் இம்முறை முதலீடு மிகவும் பிரசித்தம்.
இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் கிடைக்கும்.
1. பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவது/ விற்பது போல, இ.டி.எஃபையும் எளிதில் வாங்கலாம்; விற்கலாம் - அதுவும் மிகக் குறைந்த கமிஷனில். தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதை நிர்வாகம் செய்ய எடுத்துக் கொள்ளும் தொகையும் மிக மிகக் குறைவு (low expense ratio).
2. சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நம் லாப நஷ்டமும் இருக்கும்.
3. மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளில் எப்போது முதலீடு செய்தாலும், அன்றைய முடிவில் தரப்படும் என்.ஏ.வி. தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இ.டி.எஃப்.பில் முதலீடு செய்யும்போது பங்குகளைப் போல ஒரே நாளில் பல விலைகளில் வாங்க/விற்க முடியும்.
5. இந்தியா அடுத்த 20/30 வருடங்களுக்கு உலக அளவில் ஒரு தலை சிறந்த பொருளாதாரமாக விளங்கி முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும். அவ்வாறு வளரும் தருணத்தில் இந்திய பங்குச் சந்தையும் அதன் குறியீடுகளும் நன்றாக வளரும். அந்த வளர்ச்சியை இ.டி.எஃப்.களில் நேரடியாகக் காணலாம்.
6. மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீட்டாளர் களும், குறுகிய கால முதலீட்டாளர் களும் அடிக்கடி உள்ளே வந்து செல்வதால் ஏற்றயிறக்கம் இருக்கும். இ.டி.எஃப்.பில் அந்தப் பிரச்னை இல்லை.
7. பங்கு சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு வருமான வரி, பங்குகளைப் போலவே பாவிக்கப்படும். கடன் சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு, கடன் திட்டங்களைப் போல பாவிக்கப்படும்.
இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பலவிதமான இ.டி.எஃப்.கள் நம் நாட்டில் உள்ளன. பங்கு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, துறை சார்ந்தவை, கமாடிட்டி சார்ந்தவை (தங்கம்) என பல வகைகளில் கிடைக்கிறது.
எவ்வகையான முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்?
இ.டி.எஃப். எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்) அந்த பொருள் ஏறுமளவுக்கு, எனக்கு கிடைக்கும் வருமானம் இருந்தால் போதுமானது - கூடவோ, குறையவோ வேண்டாம் என்று நினைப்பவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்கள், சந்தையின்/ குறியீட்டின் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி வருமானம் செய்ய நினைப்பவர்கள், ஹெட்ஜ் செய்ய விரும்புபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
டே டிரேடிங் அல்லது மிகக் குறுகிய காலத்திற்காக வர்த்தகம் செய்பவர்கள், இ.டி.எஃப்-ஐ உலகெங்கிலும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
இந்தியாவில் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
இந்தியாவில் இ.டி.எஃப்.கள் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. எனவே, சில இ.டி.எஃப்.கள் வர்த்தகமாகும் அளவு (volume) குறைவாக உள்ளது. முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களை முதலீடு செய்ய தேர்வு செய்யும்போது, தினசரி வர்த்தகமாகும் அளவை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மேலும், அத்திட்டத்தை நிர்வாகம் செய்ய வசூலிக்கப்படும் தொகை, அதை நிர்வகிக்கும் நிறுவனம், அத்திட்டத்தின் செயல்பாடு, எந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அக்குறி யீட்டை தொடர்ச்சியாக மிகச் சரியாக பிரதிபலிக்கிறதா என்பனவற்றையும் கவனிப்பது அவசியம்.
இந்தியாவில் தற்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இ.டி.எஃப். திட்டங்கள் தங்கம் சார்ந்தவைதான். கோல்டு இ.டிஎஃப். திட்டங்களில் கோல்டுபீஸ், நிஃப்டி 50-ஐ அடிப்படையாகக் கொண்ட நிஃப்டி பீஸ், வங்கி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பேங்க் பீஸ் போன்ற இ.டி.எஃப்.கள் பிரபலமாக இருக்கின்றன. ஜூனியர் நிஃப்டியை வைத்து ஜூனியர்பீஸ், சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை வைத்து எம்-100-ம் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. இது தவிர இன்ப்ஃராபீஸ், லிக்விட்பீஸ் போன்றவையும் வர்த்தகமாகிறது. வெளிநாட்டுக் குறியீடுகளை வைத்தும் இந்தியாவில் இப்போது ஹேங்செங்பீஸ் மற்றும் நாஸ்டாக்-100 போன்ற இ.டி.எஃப்.களும் கிடைக்கின்றன.
(படி ஏறுவோம்)
No comments:
Post a Comment