Pages

Tuesday, April 12, 2011

சகோதர சோதனைகள்! - இந்தியாவின் இருபெரும் பணக்காரர்கள்

சகோதர சோதனைகள்!

ட்ட காலிலேயே படும் என்கிற மாதிரி இந்தியாவின் இருபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் அடுத்தடுத்து பல சோதனைகளில் சிக்கித் தவியாய்த் தவிக்கிறார்கள். எத்தனை சோதனை வந்தாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு வந்துவிடும் அறிவும் திறமையும் இந்த இரு சகோதரர்களிடமும் உண்டு. எனவே, இவர்களின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பது ஒரு பக்கமிருக்க, அம்பானி சகோதரர்களுக்கு அப்படி என்ன சோதனை வந்துவிட்டது என்பதைப் பார்ப்போம்.
முதலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வந்த சோதனையைப் பார்ப்போம்.
குறையும் எரிவாயு!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருங்கால வருமானத்துக்கு மிகப் பெரிய அளவில் நம்பி இருந்தது, கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் டி-6 பிளாக்கில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைத்தான். அண்மைக் காலம்வரை மிகப் பெரிய அளவில் இந்த படுகையிலிருந்து எரிவாயு கிடைக்கும் என்றுதான் நினைத்தது ரிலையன்ஸ். ஆனால், சமீபத்தில் வந்த செய்திகளின்படி, முன்பு எதிர்பார்த்த அளவுக்கு எரிவாயு கிடைக்காது என்கிற தகவல் முகேஷ் அம்பானியை மட்டுமல்ல, அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரையுமே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. டி-6 பிளாக்கிலிருந்து தினமும் 60 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் எரிவாயு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது வெறும் 47 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் என்ற அளவுக்குதான் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். தவிர, டி-1 மற்றும் டி-3 பிளாக்குகளிலிருந்து கிடைக்கும் எரிவாயுவின் அளவும் குறையலாம் என்கிறார்கள். ஆக, எரிவாயுவின் மூலம் வரவேண்டிய வருமானம் வராமல் போனால், அதை ரிலையன்ஸ் நிறுவனம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது முகேஷ§க்கு முன் இருக்கும் பெரிய சோதனை.

'ரிலையன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் கொஞ்சம் அக்கறையோடு அணுக வேண்டிய பிரச்னை இது. காரணம், கே.ஜி. பேசின் மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்தால், அதை ரிலையன்ஸ் குரூப்பில் உள்ள லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களிலிருந்துதான் எடுக்க வேண்டியிருக்கும். ஆக, ஒரு மைனஸ் பல பிளஸ்களை கரைத்துவிடும்'' என்றார் மும்பையில் இருக்கும் பங்குச் சந்தை புரோக்கர் ஒருவர்.
தம்பி அனில் அம்பானியோடு ஒப்பிடும்போது அண்ணன் முகேஷ் அம்பானி அதிர்ஷ்டசாலிதான். மேற்சொன்ன ஒரேஒரு கஷ்டம் தவிர, அவருக்கு பெரிய அளவில் வேறு கஷ்டம் எதுவுமில்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், தம்பி அனில் அம்பானிக்கு அப்படியில்லை. அவருடைய பெரும்பாலான நிறுவனங்கள் மட்டுமல்ல, அவரே பல்வேறு பிரச்னைகளில் மாட்டி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார். முதலில் அவருடைய நிறுவனங்களுக்கு வந்திருக்கும் சோதனைகளைப் பார்ப்போம்.
கழுத்தை நெறிக்கும் கடன்!
கடனே வாங்காத நிறுவனங்களே இல்லை. ஆனால், அளவுக்கதிகமாக கடன் இருக்கும் எந்த நிறுவனமும் நிம்மதியாக இருந்ததும் இல்லை என்பதற்கு ஒரு அருமையான உதாரணம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இந்த நிறுவனத்துக்கு இப்போது இருக்கும் கடன் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 34,000 கோடி). கடந்த ஆறு காலாண்டுகளாக நஷ்டத்தை மட்டுமே வருமானமாக சம்பாதித்து வருகிறது இந்த நிறுவனம். இவ்வளவு பெரிய கடன் ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் பெரிய அளவில் வருமானமும் இல்லை.
இது தவிர, 2ஜி அலைவரிசை  கிடைத்தது தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரித்து வருகிறது. நாடாளுமன்ற கணக்குக் குழுவும் இது தொடர்பாக அனில் அம்பானியை சமீபத்தில் அழைத்து விசாரித்தது. இப்படி அடுத்தடுத்து பல சோதனைகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வந்து சேர, இதிலிருந்து விடுபட ஓடிக் கொண்டிருக்கிறார் அனில்.
தப்பாகிப் போன கணக்கு!
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வை கொண்டு வந்தபோது இந்தியா முழுக்க உள்ள ஷேர் மார்க்கெட் முதலீட்டாளர்கள் அதில் பணத்தைக் கொண்டு வந்து
கொட்டினார்கள். ஐ.பி.ஓ-வின் போது எந்த நிறுவனத்துக்கும் கிடைக்காத வரவேற்பு ரிலையன்ஸ் பவருக்கு கிடைத்தது. ஆனால், ஐ.பி.ஓ. வந்த ஓராண்டு காலத்திலேயே அந்த ஷேர் பாதி விலையாகக் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விலையில் இயற்கை எரிவாயுவைக் கொடுக்க மறுத்ததுதான். அனில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை தொடங்கியதே ரிலையன் ஸிடமிருந்து குறைந்த விலையில் இயற்கை எரிவாயு கிடைக்கும் என்பதால்தான். ஆனால், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய பிறகும் அனிலால் இயற்கை எரிவாயுவை வாங்க முடியவில்லை.
இனி ரிலையன்ஸ் பவர் நிறுவனம், மார்க்கெட் விலைக்குத்தான் இயற்கை எரி வாயுவை வாங்க வேண்டும். இதனால், அந்நிறுவனத்தின் லாபம் பெருமளவில் குறையும். எரிவாயு கிடைக்காதபட்சத்தில் நிலக்கரியை வாங்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும். நிலக்கரி விலையும் இப்போது அதிகமாகவே இருக்கிறது. மின்சார உற்பத்திக்கான மூலப் பொருட்களை மிகக் குறைந்த செலவில் அனில் அம்பானி எப்படி கொண்டு வரப் போகிறாரோ?
கட்டுமானத்துக்கு வந்த கஷ்டம்!
கட்டுமான நிறுவனங்கள் அனைத்துக்குமே இப்போது கஷ்டகாலம். இன்ஃப்ரா பங்குகள்  மிகப் பெரிய சரிவை சந்தித்து தரை தட்டி நிற்கின்றன. எல் அண்ட் டி நிறுவனம் மட்டுமே ஓரளவு லாபத்தை தந்து வருகிறது. ஆனால், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கும் கஷ்டகாலம் தான். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது இந்தப் பங்கு ஒன்றின் விலை 1,200 ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்று முதல் விலை குறைய ஆரம்பித்து, கடந்த பிப்ரவரி மாதம் 535 ரூபாய் வரை குறைந்தது.
இதற்கு முக்கிய காரணம், அனில் அம்பானி குழும நிறுவனங்களின் மீது பங்கு தாரர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மைதான். மேலும், 2009-10-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 1,151 கோடி ரூபாய். ஆனால், இந்த நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான முதல் மூன்று காலாண்டில் இந்நிறுவனம் 581 கோடி ரூபாய் மட்டுமே லாபம் சம்பாதித்துள்ளது. மார்ச் காலாண்டு முடிவு இனிமேல் வரவேண்டும் என்றாலும், அதிலும் மிகப் பெரிய லாபம் எதுவும் வந்து விடப் போவதில்லை. இதையெல்லாம் கணக்கிட்ட முதலீட்டாளர்கள் அந்நிறுவனத் தின் பங்கை சரமாரியாக விற்கத் தொடங்க, பங்கின் விலை கடுமையாகக் குறைந்து வருகிறது. இந்த விலைச் சரிவை தடுத்து நிறுத்த, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பங்குகளைத் திரும்ப வாங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு பங்கு விலை சராசரியாக 725 ரூபாய்க்கு திரும்ப வாங்க ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் முடிவு செய்தாலும் பங்கின் விலை 692 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. பைபேக் அறிவித்த பிறகும் இந்தப் பங்கின் விலை குறைந்து வருவது அனிலுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு பெரிய சோதனை.
எல்லா பிஸினஸ்மேன் களுக்கும் சோதனைகள் வரும், போகும். அம்பானி சகோதரர் களுக்கும் இப்போது கஷ்டகாலம் வந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த கஷ்டங்களுக்குத் தீர்வு கண்டு, அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள் என்றாலும், இப்போதுள்ள நிலையில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்கள் தொடர்ந்து அதை வைத்திருப் பதா, இல்லை இப்போதைக்கு விற்றுவிட்டு, பிற்பாடு வாங்குவதா என்பதை கொஞ்சம் யோசித்தே முடிவு செய்ய வேண்டும்!
-ஏ.ஆர்.குமார்

Source - Vikatan Magazine

No comments: