Pages

Wednesday, May 11, 2011

முதற்படி முதலில் படி! - 23

முதற்படி முதலில் படி!

சென்ற வாரம் 'ரேஷியோ அனாலிசிஸ்’ பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வாரமும் மேலும் சில முக்கியமான ரேஷியோக்களைப் பற்றி பார்ப்போம். எந்த ஒரு தொழிலும் லாபகரமாக நடக்கிறதா என்பது முக்கியம். அவ்வகையில் சில முக்கியமான ரேஷியோக்கள் சிலவற்றைப் பார்ப்போம். ஒன்று, ஆர்.ஓ.இ. (ROE – Return on Equity) என்பதாகும். பங்கு முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம்தான் ஆர்.ஓ.இ. எனப்படுகிறது.
ஆர்.ஓ.இ. = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு.
இது சதவிகிதமாக கூறப்படும். இந்த ஆர்.ஓ.இ. பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு எவ்வளவு என்று பார்ப்போம். பங்குதாரர்களின் முதலீடு என்பது ஷேர் கேப்பிட்டல் மற்றும் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பெல் நிறுவனத்திற்கு 31-03-2010 அன்று ஷேர் கேப்பிட்டல் 489.52 கோடி ரூபாயாகும். அன்றைய தினத்தில் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் 15,427.84 கோடி ரூபாய். ஆக மொத்தம் 15,917.36 கோடி ரூபாய்.  அவ்வருட நிகர லாபம் 4,310.64 கோடி ரூபாய். ஆகவே பெல் நிறுவனத்தின் ஆர்.ஓ.இ. 27.08% (4,310.64/15,917.36) ஆகும். இதையே ஆர்.ஓ.என்.டபிள்யூ (RONW – Return on Net Worth) என்றும் கூறுவார்கள். இந்த ரேஷியோ, பங்குதாரர்களின் முதலீட்டை ஒரு நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாகப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும்.
பங்குச் சந்தை முதலீட்டாளர் களால் பரவலாக அலசப்படும் இன்னொரு ரேஷியோ ஆர்.ஓ.ஏ. (ROA – Return on Assets) ஆகும். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஆர்.ஓ.ஏ. = நிகர லாபம்/மொத்த சொத்துக்கள்.

பெல்லின் மார்ச் 2010-ம் ஆண்டிற்கான நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். அந்த ஆண்டின் மொத்த சொத்துக்களின் மதிப்பு  16,045 கோடி ரூபாய். ஆகவே, அதன் ஆர்.ஓ.ஏ. (4310/16045) 26.9% ஆகும். ஆர்.ஓ.ஏ. அதிகமாக இருப்பது நன்று. வங்கிகள் போன்ற அதிகமாக சொத்துக்கள் தேவைப்படும் துறைகளுக்கு ஆர்.ஓ.ஏ. என்பது 1% - 2% என்ற
ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது. இந்த விகிதத் தில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் (பணம்) தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
'அஸட் டேன்ஓவர் ரேஷியோ’ என்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவ தாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.
அஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை/ மொத்த சொத்துக்கள்.
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ம் ஆண்டின் மொத்த விற்பனை 34,396.67 கோடி ரூபாய். அந்த ஆண்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 16,045 கோடி ரூபாய். ஆகவே அஸட் டேன்ஓவர் ரேஷியோ 2.14 (34396.67/16045) ஆகும். பொதுவாக குறைந்த லாப மார்ஜின் உள்ள நிறுவனங்களுக்கு அதிக அஸட் டேன்ஓவர் இருக்கும். அதேபோல் அதிவேகமாக வளரும் நிறுவனங்கள் லாபத்துடன் வளர்கின்றனவா என்பதையும் இந்த ரேஷியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
'இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ’ (Interest Coverage Ratio) இன்னுமொரு முக்கியமான விகிதமாகும். இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும்) இது ஒரு முக்கியமான விகிதம். இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.
இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்/வட்டிச் செலவு.
பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 6,590 கோடி ரூபாயாகும். அவ்வருட வட்டிச் செலவு 33.5 கோடி ரூபாய். ஆகவே, இன்ட்ரஸ்ட் கவரேஜ் கிட்டத்தட்ட 199.6 (6727/33) ஆகும்.
இந்த விகிதம் அதிகமாக இருப்பது பொதுவாக நல்லது. பெல் போன்ற இன்ட்ரஸ்ட் கவரேஜ் உள்ள நிறுவனத்திற்கு வங்கிகளும் தனிநபர்களும் கடன் கொடுப்பதற்கு வரிசையில் நிற்பர். அதோடு மட்டுமல்ல குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ = மொத்த டிவிடெண்ட்/நிகர லாபம்.
பெல் நிறுவனம் மார்ச் 2010-ம் ஆண்டு பங்குதாரர்களுக்கு வழங்கிய மொத்த டிவிடெண்ட் (டிவிடெண்ட் டேக்ஸ் உட்பட) 1,350 கோடி ரூபாய். அவ்வருட நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். ஆகவே, டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ 31.3% (1350/4310) ஆகும். மீதி உள்ள லாபத்தை தனது தொழில் வளர்ச்சிக்காக பெல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் உள்ள நிறுவனங்களின் டிவிடெண்ட்  பே அவுட் ரேஷியோ சற்று குறைவாகவே இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களில் இந்த ரேஷியோ பொதுவாக அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் அதிக பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களும் உள்ளன. பங்கு முதலீட்டில் சற்று ரிஸ்க் குறைவாக எடுக்க நினைப்பவர்கள் அதிக டிவிடெண்ட் பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்யலாம்.
இதுவரை நாம் முக்கியமான ரேஷியோக்கள் பற்றிப் பார்த்தோம். இதுபோல் பல ரேஷியோக்கள் உள்ளன. இது ஒரு ஆரம்பமே; முடிவல்ல! நீங்கள் வாங்கப் போகும் நிறுவனங்களின் விகிதாச்சாரங் களை அலசி ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, May 2, 2011

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 22

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..


சென்ற வாரங்களில் குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி கண்டோம். இனி சற்று ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கு உண்டான அளவீட்டு முறைகள் பற்றி பார்ப்போம். விகிதாசார ஆய்வு (ரேஷியோ அனாலிசிஸ்) என்பது ஃபைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும். சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்...
ங்களது சம்பளம் மாதத்துக்கு 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு மாதத்திற்கு 6,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை, உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40% (8,000/20,000). இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்குப் பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள். ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% (7,000/20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்.
 
இதேபோலத்தான் நீங்கள் வாங்கப்போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். ரேஷியோ அனாலிசிஸ் ஒரு பெரிய கடல் என்றாலும், அதில் முக்கியமான சில விகிதாசாரங்களை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம். விகிதாசாரங்களை லாப அடிப்படையில், ஆபரேஷன்ஸ் அடிப்படையில், நிர்வாகத் திறமையின் அடிப்படையில், கடன் அடிப்படையில் என பலவாறாகப் பிரித்துக் கொள்ளலாம். நாம் இங்கு சில முக்கியமான விகிதங்களைப் பார்ப்போம். முதலில், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சில விகிதங்களை முதலில் பார்ப்போம்...
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ல் முடிந்த 'இன்கம் ஸ்டேட்மென்ட்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்மென்ட் ஒரு பொது வடிவத்தில் உள்ளது. இதில் அந்நிறுவனத்தின் நிகர விற்பனை 33,226.25 கோடி ரூபாயாகும்; மேலும் ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் 786.65 கோடி ரூபாயாகும். அந்நிறுவனத் தின் மொத்த செலவுகள் 27,913.71 கோடியாகும். அதன் ஆபரேட்டிங் லாபம் 6,099.19 கோடியாகும் (33,226.25 + 786.65 - 27,913.71).
ஆபரேட்டிங் பிராஃபிட் என்பது வட்டி, தேய்மானம் மற்றும் வருமான வரிக்கு முன்பான லாபம். அதாவது, நிகர விற்பனையிலிருந்து விற்பனைக்கு நேரடியாக உள்ள செலவுகளைக் கழித்தால் கிடைப்பது. இப்போது அந்நிறுவனத்தின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் என்னவென்று பார்ப்போம்...
[ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் = ஆபரேட்டிங் பிராஃபிட்/நிகர விற்பனை]
அதன்படி பெல்லின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் 18.4% (6,099.19/33,226.25) ஆகும்.
அதைப்போல நெட் பிராஃபிட் (நிகர லாப) மார்ஜினும் மிகவும் உபயோகமான ஒன்று.
[நெட் பிராஃபிட் மார்ஜின் = நெட் பிராஃபிட்/ மொத்த வருமானம்]
நிகர விற்பனையுடன் மற்ற வருமானம் மற்றும் ஸ்டாக் கூட்டி குறைவதைச் சேர்த்துக் கொண்டால் மொத்த வருமானம் கிடைக்கும். பெல் நிறுவனத்துக்கு அவ்வருடம் பிற வருமானங்கள் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமோ அல்லது சொத்துக்களை விற்றதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் செய்யும் தொழில் சாராததிலிருந்து வரும் வருமானம்) 1,085.73 கோடி ரூபாயாகும். ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட் 786.65 கோடி. ஆக, அந்த வருட மொத்த வருமானம்  35,098.63 கோடியாகும். நிகர லாபம் 4,310.64 கோடியாகும். இந்த நிகர லாபத்திற்கும் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதம்தான் நெட் பிராஃபிட் மார்ஜின். பெல்லின் மார்ச் 2010 நிகர லாப மார்ஜின் 12.30% (4,310.64/35,098.63) ஆகும். இந்த விகிதம் மூலம் ஒவ்வொரு ரூபாய் விற்பனைக்கும் லாபம் எவ்வளவு என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர மூலப் பொருட் களுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; விற்பனை, நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம் என நமது ஆய்வின் தேவைக்கு ஏற்றாற்போல் பலவிதமான விகிதங்களை கணக்கிட்டு கொண்டே செல்லலாம். இவ்விகிதங்களைக் கணக்கிடுவது பெரிதல்ல. கணக்கிடுவதோடு அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் விகிதம் எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாங்கப்போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரியும் - சேமிப்பில் உங்கள் நண்பரை ஒப்பிட்டது போல!
இன்னும் சில முக்கியமான விகிதங்களைப் பற்றி கீழே பார்ப்போம். சிறிய தொழில் செய்யும் பலர் தங்களிடம் எவ்வளவு சரக்கு (இன்வென்டரி) உள்ளதோ அவ்வளவு தங்களுடைய தொழில் பலமாக உள்ளது என்று நினைப்பார்கள். ஆனால், பெரிய தொழில் நிறுவனங்கள் அப்படி நினைக்காது. காரணம், நாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் உள்ள சரக்குகளைப் பற்றி பேசுகிறோம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஜப்பானியர்கள் அறிமுகப்படுத்திய 'ஜஸ்ட் இன் டைம் இன்வென்டரி மேலாண்மை’ இன்று பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருந்துக்கடைக்காரர். உங்களின் தினசரி விற்பனை 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு சுமாராக 72 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். உங்கள் கடையில் எப்போதும் இருக்கும் சரக்கோ 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்கள் சரக்கின் சுழற்சி 6 (72/12) ஆகும். இந்த சுழற்சியை நீங்கள் கூட்ட முடிந்தால் உங்களின் லாபம் உறுதியாக கூடும். பெல் நிறுவனத்தின் சரக்கு சுழற்சி என்னவென்று கீழே பார்ப்போம்.
[இன்வென்டரி டர்னோவர் = ஆண்டின் விற்பனை/ ஆண்டு முடிவில் உள்ள சரக்குகளின் மதிப்பு]
பெல் நிறுவனத்தின் ஆண்டு இறுதி இன்வென்டரி (பாலன்ஸ் ஷீட்டில் கிடைக்கும்) 9,235.46 கோடியாகும். அவ்வருட நிகர விற்பனை 33,226.25 கோடி என நமக்குத் தெரியும். ஆக, பெல் நிறுவனத்தின் இன்வென்டரி டர்னோவர் 3.6 (33226.25/9235.46) ஆகும். இந்த இன்வென்டரி டர்னோவர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது. அத்தனை முறை நிறுவனம் தன்னிடம் உள்ள சரக்குகளை சுழலச் செய்துள்ளது என்று பொருள்.
மேற்கண்ட ரேஷியோக்களைப் போல, ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப்போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். இதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிற்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ’ எனக் கூறுவர். பெல் நிறுவனத்தின் மொத்தக் கடன் மார்ச் 2010 முடிவில் 127.75 கோடி ரூபாயாகும். அவ்வாண்டு பங்கு மூலதனம் மற்றும் ரிஸர்வ்ஸ் 15,917.36 கோடி ரூபாயாகும். ஆகவே, அதன் 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ’ 0.008 (1%-ற்கும் குறைவு) (127.75/15,917.36) ஆகும். இதுவே சில நிறுவனங்களுக்கு 100% அல்லது 200% என்றுகூட இருப்பது உண்டு. உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதுபோல் அதிகக் கடன் இருந்தால், பொருளாதாரம் சீர்குலையும்போது, அந்த  நிறுவனங்கள் மூலைக்குத் தள்ளப்படும்.
[டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ = மொத்தக் கடன்/ ஷேர்ஹோல்டரின் நிதி]
ரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தித் துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும். உதாரணமாக,  ரீடெய்ல் துறையில் டர்னோவர் ரேஷியோ அதிகமாக இருக்கும். நிதித்துறை நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்துறை நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் இருக்கலாம். ஆகவே ரேஷியோக்களை அதன் துறை சார்ந்த, ஒரே அளவிலான நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே சரி.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Friday, April 29, 2011

இது ஐ.பி.ஓ. முதலீட்டுக்கு ஏற்ற காலமா?

இது ஐ.பி.ஓ. முதலீட்டுக்கு ஏற்ற காலமா?

முதலீடு செய்வதில் ஒவ்வொருத்தருடைய ஸ்டைலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது. சிலர் குறிப்பிட்ட ஒரே ஒரு பங்கை மட்டுமே வாங்கி வருவார்கள். சிலர் செகண்டரி மார்க்கெட்டில் மட்டுமே வாங்குவார்கள், மறந்தும்கூட ஐ.பி.ஓ. பக்கம் ஒதுங்க மாட்டார்கள். இன்னும் சிலரோ வாங்கினால் ஐ.பி.ஓ-வில்தான் வாங்குவேன் என்று சபதம் போட்டுவிட்டு வந்திருப்பார்கள்!
ஐ.பி.ஓ. வரும்போது ஒரு லாட் இரண்டு லாட் என்று முதலீடு செய்வார்கள். பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றே மொத்த பங்குகளையும் விற்று லாபம் பார்த்து விடுவார்கள். எக்காரணம் கொண்டும் அந்த
முதலீட்டை தொடர மாட்டார்கள். இப்படியான முதலீட்டாளர்களை இப்போது சந்தித்துக் கேட்டால் அவர்கள் ரத்தக் கண்ணீர் விடுவார்கள்! காரணம் சமீபத்தில் வெளிவந்த அத்தனை ஐ.பி.ஓ-களிலும் அவர்கள் முதலீடு செய்திருந்தால் அவர்களின் முதலீடு கிட்டத்தட்ட பாதிக்கு மேல் கரைந்திருக்கும்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட அத்தனை ஐ.பி.ஓ-களையும் எடுத்து ஆராய்ந்தோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த மொத்த ஐ.பி.ஓ-களின் எண்ணிக்கை 81. இதில் 30 பங்குகள்தான் பட்டியலிடப்பட்ட விலையைவிட அதிகமான விலையில் வர்த்தகமாகிறது. மீதமுள்ள 51 பங்குகள் பட்டியலிடப் பட்ட விலையைவிட குறைவாகவே வர்த்தகமாகிறது. இதிலும் 17 பங்குகள் 50 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது.

இருந்தாலும் நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சந்தை இப்போது ஓரளவு ஸ்திரமாக இருப்பதுதான்.
அதேபோல் சிறு முதலீட்டாளர் களும் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் ஏதாவது ஒரு ஐ.பி.ஓ.-விலாவது பணத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்பதுதான்!
லேட்டஸ்ட் வரவு ஃபியூச்சர் வென்ச்சர்ஸ் ஐ.பி.ஓ. சமீபகால மாகவே ஐ.பி.ஓ. வரும் அனைத்து நிறுவனங்களுமே முகமதிப்புக்கு மேலாக அதிக பிரீமியம் வைத்தே வெளியிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முகமதிப்பிலேயே ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ. வருகிறது என்றால் அது வித்தியாசமான ஒன்றுதானே!
பத்து ரூபாய் பங்கு பத்து ரூபாய்க்கே கிடைக்கலாம் என்பது பாராட்டத்தகுந்த விஷயம்தான் என்றாலும், இந்தப் பங்கினை வாங்குவது லாபகரமாக இருக்குமா என்பது அதைவிட முக்கியமானதல்லவா? இதுகுறித்து பேட்டர்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் சத்யநாராயணனிடம் கேட்டோம். இந்த ஐ.பி.ஓ.-வை பற்றி பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துச் சொன்னார்.
''ரீடெய்ல் துறையின் முன்னோடி நிறுவனமான இதன் முக்கிய பிஸினஸ் உணவு மற்றும் ஆடைகள்(ஃபேஷன்)தான். இந்த இரண்டுக்கும் எப்போதுமே டிமாண்ட் இருக்கத்தான் செய்யும். இது சாதகமான விஷயம். இனி பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த நிறுவனம் இப்போது 750 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டப்போகிறது. இதில் 150 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளுக்காகவும், மீதமுள்ள பணத்தை நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளது. அதாவது, மீதமிருக்கும் 600 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள், எதில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்ற முழுமையானத் திட்டம் இவர் களிடத்தில் இல்லை.
ரீடெய்ல் துறை எப்போதுமே டிமாண்ட் உள்ள துறையாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரம் மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும் போது, மக்கள் முதலில் குறைக்கும் செலவு ரீடெய்லுக்கான செலவாகத் தான் இருக்கும்.
இவை எல்லாவற்றையும்விட 2008-ம் ஆண்டு ஃபியூச்சர் கேப்பிட்டல் நிறுவனத்துக்காக 490 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டினார்கள். பட்டியலிடப் பட்ட சமயத்தில் ஒரு பங்கின் விலை 765 ரூபாய். தற்போது 164.45 ரூபாயில் வர்த்தகமாகிறது. கிட்டத் தட்ட 4.5 மடங்குக்கு மேல் குறைவு.

'ஏற்கெனவே நஷ்டமடைந்தது போல் இனிமேலும் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகத்தான் பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கினை பத்து ரூபாய்க்கே தருகிறோம்’ என்று இந்நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி சொல்லி இருக்கிறார். ஆனால், அதையும் முழுமையாக ஏற்க முடியவில்லை. இந்த பங்கினையும் பிரீமியம் விலையில் கொண்டுவந்திருந்தால் முதலீடு செய்ய யாரும் வரமாட்டார்கள். அதனால்தான் முகமதிப்பிலேயே கொண்டு வந்திருக்கிறார். மேலும் இந்த குரூப் நிறுவனங்களில் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால் மற்ற நிறுவனங்களில் இருக்கும் நிதித்தட்டுப்பாட்டைச் சமாளிப் பதற்காக இந்த ஐ.பி.ஓ. கொண்டு வரப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்ய வேண்டாம்.
பட்டியலிடும் அன்றைக்கே விற்றுவிட்டு லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவர்களுடைய ரிஸ்க். சந்தையின் இறக்கத்தில் பெரிய பெரிய நிறுவனங்களின் பங்குகளே சரிவைச் சந்திக்கும்போது, இந்த நிறுவன பங்கும்  விலை குறையவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பட்டியலிடப்பட்ட பின்பு மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து வாங்குவதே சரியாக இருக்கும்'' என்றார்.

-வா.கார்த்திகேயன்

Source - Vikatan Magazine

யார் பினாமி?

யார் பினாமி?

சர்ச்சை

நேற்று சாதாரணமாக சைக்கிளில் சென்ற ஒருவர் இன்று காரில் வந்து இறங்குகிறார். எப்படி இவருக்கு இவ்வளவு செல்வம் சேர்ந்தது என குழம்பிப்போவோம். விபரமறிந்தவர்கள் சொல்வார்கள் அவர், 'எவருக்கோ பினாமியாக இருக்கிறார்’ என்று. இப்படி 'இவர் அவருக்கு பினாமி, அவர் இவருக்கு பினாமி’ என பினாமிகள் பற்றி பல  கிசுகிசுக்கள் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் நம் காதுகளுக்கு வரத்தான் செய்கிறது.
ண்மை காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற பினாமிகள் அதிகரித்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இதனால் ஏற்படுவதால் இந்த போக்கைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவியாய் தவிக்கிறது.
பினாமிக்கு 'இரவல் பெயர்’ என்று தமிழில் அர்த்தம் சொல்லலாம். 'பெயர் இல்லாதது’ என்று உருது மொழி சொல்கிறது. இந்த பெயர் இல்லாததுதான் இந்த பாடு படுத்துகிறது இந்தியாவை.
யார் பினாமி?

ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதையோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
ஆரம்ப காலத்தில், பாசத்தை வெளிக்காட்டும் விதமாக மனைவி, பிள்ளைகள் பெயரில் குடும்பத் தலைவர் சொத்துக்கள் வாங்குவது நடந்தது. அதாவது, மிகவும் நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துகள் வாங்குவார்கள். 
அதன்பிறகு கடன்காரர்களை ஏமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய, லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதித்ததை கணக்கில் காட்டாமல் மறைக்க, கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுக்க என பல காரணங்களால் குடும்ப உறவு அல்லாத ஆட்களின் பெயரில் சொத்து வாங்குவது அதிகரித்தது. இப்படி குடும்ப உறவு இல்லாத மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதுதான் பினாமி சொத்து ஆகும்.
இப்படி பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி, பினாமிக்கும் சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்கும் இடையே பிரச்னை வந்துவிட்டால் என்ன ஆகும்? சொத்து யார் கைக்கு போய்விடும்? 1988-ம் வருடத்துக்கு முன்பு வரை சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்குதான் உரிமை போய்ச் சேர்ந்தது. ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்...
பிரபு என்கிற நபர், வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க தன் நண்பரான சுரேஷ் பெயரில் பினாமியாக சொத்தை பதிவு செய்தார். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பிரபு வாங்கிக் கொடுத்த சொத்தை, சுரேஷ் தர முடியாது என்று சொல்லி விட்டார். பிரபு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுரேஷ் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்பதை நிரூபித்தார். விளைவு, பிரபு வசம் சொத்து வந்தது. அதாவது, சொத்தை வாங்க யார் பணம் கொடுத்தார்களோ அவர்களே உண்மையான உரிமையாளர் என்றானது. இதேபோல், மனைவி பெயரில் கணவர் சொத்து வாங்கியிருந்தாலும், மனைவி தான் இஷ்டப்பட்டவர்களுக்கு அந்த சொத்தை கொடுக்க முடியாத நிலைதான் இருந்தது. அதாவது, அப்பாவின் பணத்தில் அம்மா பெயரில் சொத்து வாங்கப்பட்டிருந்ததால், அதை குறிப்பிட்டு எங்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது என தாய் மீது வழக்கு தொடர்வதும் அதிகரித்தன.
1988-க்கு முன்பு வரை பினாமி சொத்துகளை முறைப்படுத்த சரியான எந்தச் சட்டமும் இல்லாததால் இப்படி பல பிரச்னைகள் எழுந்தன. 
பினாமி தடுப்புச் சட்டம்
அத்துமீறி செயல்படுபவர்களையும், சட்ட விரோதமாக சம்பாதிப்ப வர்களையும் கட்டுப்படுத்தும் விதமாக 1988-ம் ஆண்டு, 'பினாமி சொத்து தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.
அதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:
* பினாமி சொத்தை வாங்குவதோ விற்பதோ சட்ட விரோதம்.
* சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர்.
* பினாமி பெயரில் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள் மீது குற்ற வியல் வழக்கு தொடரப்படும்.
* குற்றம் நிரூபிக்கப்பட்டால்    3 ஆண்டு சிறைத் தண்டனை.
* பினாமி பெயரில் வாங்கப் பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன். எனவே, அது என் சொத்து என உரிமை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
* பினாமி சொத்து பறிமுதல் செய்யப்படும்.
விதி விலக்குகள்
இந்தச் சட்டத்தில் விதி விலக்குகளும் இருக்கின்றன. அதாவது, கணவன் தன் மனைவி பெயரிலோ, தந்தை  தன் திருமணம் ஆகாத மகள் பெயரிலோ சொத்து வாங்கினால் அது பினாமி தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படாது.
அதே நேரத்தில், தந்தை,  மகன் பெயரில் சொத்து வாங்கும்போது அது பினாமியாக கருதப்படும். இதேபோல், இந்துக் கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவர் மற்றவர்களுக்காக சொத்து வாங்குவது பினாமி சொத்தாக கருதப்படாது. பலர் பலன் அடையும் டிரஸ்ட் பெயரில் வாங்கப்படும் சொத்துகளும் பினாமி சொத்து அல்ல என்று தெளிவுப்படுத்தப்பட்டது. 
ஆனாலும், ஒருவர் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டாலும், அதற்கான வருமான ஆதாரம் இல்லை என்றால் அது பினாமி சொத்தாகத்தான்  கருதமுடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இப்படியான சட்டம் கொண்டு வந்த பின்னும் அதை முறையாக அமல்படுத்த விதிகள் எதுவும் இல்லை என்பதால் பினாமிகள் எல்லாம் உண்மையான உரிமையாளர்கள் போலவே நடந்து கொள்வதோடு, அதனை தங்களின் சொத்தாக கருதி அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், வாங்கிக் கொடுத்தவர்கள் திடீர் என இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி ஜெயிலுக்குப் போய்விட்டாலோ பினாமிகளுக்கு கொண்டாட்டம்தான். ஐந்து பைசா கூட போடாமல், அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் அவர்களுக்கே அவர்களுக்குதானே!
இது ஒருபுறமிருக்க பல இடங்களில் சொத்து வாங்கிக் கொடுத்தவர்களும் பினாமி சொத்தின் பலனை அனுபவிப்பதால் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது.
சட்டத் திருத்தம்..!
இந்த நிலையில் தற்போது பினாமி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் முக்கியமான சட்டத் திருத்தம் என்பதால் அது எப்படியிருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''பழைய சட்டத்தில் பினாமி சொத்து குறித்து யாரிடம் புகார் கொடுப்பது, யார் புகார் கொடுப்பது, விசாரணை வழி முறைகள் என்ன என்பது போன்ற எதுவும் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. மேலும், சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பான அதிகாரமும் வரையறுக்கப்படவில்லை. இதனால், இதுவரை பினாமி பரிமாற்றம்  தொடர்பான சொத்துகள் பறிமுதல் செய்யப்படவோ, குற்ற நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை. இந்தக் குறைபாடுகளை சரிசெய்து, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது நல்ல விஷயம்தான். 
அதாவது, பினாமி சொத்துகளை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான அதிகாரம், வழிமுறைகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்'' என்றார்.
சொத்து விலை குறையுமா?
இந்நிலையில், சொத்துக்களை வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரத்தை பினாமிகள் காட்டவில்லை என்றால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்பதை அரசு எந்த ஒரு பாரபட்சமும் காட்டாமல் அமல்படுத்தினால் நாட்டில் சொத்துக்கள் மீதான பரிவர்த்தனை குறைந்து அதன் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக மும்பையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
முறையாக சம்பாதித்து , முறையாக வரிகட்டி சொத்து சேர்த்தவர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. பிஸினஸ் மேன்களும், அரசியல்வாதிகளும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் என்ன ஆகும்?  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெரியும்?  பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
- சி.சரவணன்

Source - Vikatan Magazine

Sunday, April 24, 2011

முதற்படி முதலில் படி! - 21

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
டிவிடெண்ட் யீல்டு
கடந்த இரண்டு வாரங்களாக குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முக்கியமான விஷயங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மேலும் சில முக்கியமான  அளவுகோல்கள் குறித்துப் பார்ப்போம்...
டிவிடெண்ட் யீல்ட்: எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும். நீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷம்தானே? அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும். நாம் நீண்ட நாட்களுக்கு ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு
டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர் களுக்கு பிரித்துக் கொடுப்பது. இதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாமா?

ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டில் இந்த முகமதிப்பின் அடிப்படையில் டிவிடெண்டை அறிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்தியன் வங்கி, மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் 25% டிவிடெண்ட் ஒருமுறையும், 40% டிவிடெண்ட் மற்றொருமுறையும், ஆக மொத்தம் 65% (6.50) டிவிடெண்ட் அந்த ஆண்டு கொடுத்தது.
இந்த டிவிடெண்ட் சதவிகிதத்தை முகமதிப்பை அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள். ஆனால், தற்போதைய விலையின் மீது வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பது அல்லது நீங்கள் வாங்கிய விலையை வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பதுதான் சரியானது. அதைத்தான் டிவிடெண்ட் யீல்ட் என்று கூறுகிறோம். உதாரணமாக, இந்தியன் வங்கியையே எடுத்துக் கொள்வோமே!
இந்த பங்கின் தற்போதைய விலையை வைத்துப் பார்த்தால், இந்தியன் வங்கியின் மார்ச் 2010-ம் ஆண்டின் டிவிடெண்ட் யீல்ட் 2.78% (6.50/234) ஆகும். இந்தியன் வங்கி தனது பங்கை முதன் முதலில் 2007-ம் ஆண்டு மக்களுக்கு விற்றபோது நீங்கள் அப்பங்கை 91 ரூபாயில் வாங்கியிருந்தால், உங்களின் யீல்ட் 7.14% (6.50/91) ஆகும். நீங்கள் பங்குகளை வாங்கப் போகுமுன் பார்க்க வேண்டிய அளவுகோல்களில் டிவிடெண்ட் யீல்ட் ஒரு முக்கியமான அளவுகோல் ஆகும். அது அதிகமாக இருப்பது நல்லது. சில சமயங்களில் பங்கு விலை, நிறுவனத்தில் இருக்கும் பெரிய பிரச்னையால், திடீரென்று சரிந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக தென்படும். ஆகவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இந்தியப் பொருளாதாரமும், நிறுவனங்களும் இன்று வளர்ச்சிப் பாதையில் இருப்பதால், டிவிடெண்ட் யீல்ட் பொதுவாகவே குறைவாக உள்ளது. காரணம், நிறுவனங்கள் தங்களது லாபத்தை தொழில்களிலேயே திருப்பி முதலீடு செய்துவிடுவது தான். நமது நிஃப்டி குறியீட்டின் டிவிடெண்ட் யீல்ட் வெறும் 1.07 சதவிகிதம்தான். வங்கி போன்ற சில துறை சார்ந்த பங்குகளின் டிவிடெண்ட் யீல்ட் சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் டிவிடெண்ட் யீல்ட் பெரிய நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புகிறவர்கள் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக உள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். பொதுவாக பழைய பொருளாதார நிறுவனங்களின் (புதிய பொருளாதார நிறுவனங்களைவிட) டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக இருக்கும்.
உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை
பொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை/குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு  போன்றவற்றையும் பாருங்கள். இது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும். பங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் நிகழ்ந்ததைப் போல ஏதேனும் பெரிய பிரச்னைகள் ஒரு நிறுவனத்திற்கு நிகழலாம். அதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கை தேவை. சந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஷேர்ஹோல்டிங்
நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நன்றாக செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஐ.எஃப்.சி (இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாஸிட்டிவ்-ஆன விஷயம். அதை நீங்கள் ஒரு ஃபில்ட்டராக வைத்துக் கொள்ளலாம். ஓரளவு ஆராயாமல் அவர்கள் அந்நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்க மாட்டார்கள். எஃப்.ஐ.ஐ. என்று கூறப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஷேர்ஹோல் டர்களாக இருப்பது ஒரு வகையில் நன்மை - பங்கின் விலை உயரும்; மற்றொரு வகையில் தீமை - வெளிநாடுகளில் அவர்களுக்கு போட்ட பணம் தேவைப்பட்டால் இங்கிருந்து உடன் எடுத்துச் செல்லும்போது, அப்பங்கின் விலை சடாரென்று குறைய வாய்ப்புண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் பிரச்னை இல்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் அவ்வாறு அடிபட்டால் எழுந்து வர நாளாகும்.
மொத்தக் கடன்
பல நிறுவனங்கள் மூலைக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் சக்திக்கு மீறிய கடன். கடன் என்பது இருதலைக் கொள்ளி போன்றது. சமயம் சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தை அளவிற்கு அதிகமாகத் தூக்கிவிடும். கஷ்டம் என்று வருகையில் அதலபாதாளத் திற்கு தள்ளிவிடும். இதுபோல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. கடனே இல்லாமல் செயல்படும் நிறுவனங் கள் மிக மிகச் சிறந்தவை. சில நேரங்களில் நிறுவனத்துக்கு ஓரளவு கடன் இருந்தால், மேனேஜ்மென்ட் சற்று துரிதமாக வேலை பார்க்கும். மேலும், நிறுவனத்தில் சற்று வேகம் இருக்கும். அதுபோக, பங்கின் மீதான வருமானம் சற்று அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும். வங்கிகள் கடன் (டெபாசிட்) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத் துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள். அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

Monday, April 18, 2011

கம்பெனி அலசல்

 


பத்து ஆளு செய்யிற வேலைய ஒத்த ஆளா பாக்குறவன்தான் பயில்வான். அப்படி இருக்குற ஒருத்தனுக்கு இன்னொரு பயில்வான்தான் போட்டியா இருக்க முடியும். அவங்ககூட மத்த யாரும் போட்டி போட முடியாது. அப்படி ஒரு பயில்வானைப் போல உள்ள கம்பெனியைதான் இந்த வாரம் அலசப்போகிறோம்.

கட்டுமானத் துறை தளவாடங்களைத் தயாரிக்கும் ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட்தான் (ஏஸ்) அந்த நிறுவனம்.  
இந்த கம்பெனி ஈடுபட்டிருக்கிற துறையில் இவர்கள் மட்டுமே 53 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறார்கள். இருக்கிற ஒரே ஒரு போட்டி கம்பெனி 42 சதவிகித மார்க்கெட்டை வைத்திருப்பதால் இந்த துறையில் இவர்களின் மார்க்கெட் இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அதிலும் வேக வேகமாக வளர்ந்து வரும் துறையில் இருக்கும் நிறுவனம் என்பதால் அந்த வளர்ச்சிகளை எல்லாம் விற்பனையாக்கி 35% வரை (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என்ன தொழில்?
கட்டுமானத் துறையின் முக்கிய தளவாடங்களான கிரேன்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் இயந்திரங்கள், பிக்-அண்ட்-கேரி கிரேன்கள், ட்ரக்கில்  பொருத்தப் பட்டு உபயோகப்படுத்தப்படுகின்ற கிரேன்கள், எல்லாவிதமான கரடு முரடான பூமிகளிலும் சென்று வேலை செய்யக்கூடிய கிரேன்கள் மற்றும் லாரி/ட்ரக்குகளில் பொருட்களை லோட் செய்யத் தேவையான கிரேன்கள் என அனைத்துவிதமான மொபைல் கிரேன்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
மூன்று முதல் நாற்பது டன் வரையிலான எடை தூக்கும் மொபைல் கிரேன்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாமல், மொபைல் டெலி ஹேண்ட்லர்ஸ் எனப்படும் ஸ்பெஷல் வகை கிரேன்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தும் விற்பனை செய்து வருகிறது. இப்போது இந்த வகை கிரேன்களுக்கு டிமாண்ட் அதிகம் இல்லை என்றாலும், இதை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ராணுவம் இந்த  இயந்திரத்தை அப்ரூவ் செய்தால் விற்பனை மிக அதிமாகும் என எதிர்பார்க்கலாம்.
தனித்திறமை ஏதும் இருக்கிறதா?
மொபைல் கிரேனில் மட்டு மல்லாது டவர் கிரேன்களிலும் தன்னுடைய தனித்தன்மையை கோலோச்சி வருகிறது. அதோடு,  புதுவிதமான மாடல்களையும், புதிய டைப் கிரேன்களையும் வடிவமைத்து முன்னோடியாகவும் இருக்கிறது இந்த கம்பெனி.
கஸ்டமர்கள் யார்?
கட்டுமானம், சாலைப்பணி, என்ஜினீயரிங் மற்றும் ஹெவி என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரி, நிலக்கரிச் சுரங்கங்கள், கெமிக்கல் மற்றும் ஃபெர்ட்டிலைசர், மின் நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, சிமென்ட், ஆயில் மற்றும் ராணுவம் வரையிலும்  கிட்டத்தட்ட 8,500 கஸ்டமர்களைக் வைத்திருக்கிறது. ரிலையன்ஸ், ஏ.பி.ஜி., எல் அண்ட் டி, புஞ்ச் லாயிட், எஸ்ஸார், பி.எச்.இ.எல்., நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன், குஜராத் அம்புஜா, சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ரா, கோல் இந்தியா, கேமான் இந்தியா என இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பார்த்தாலே இந்த கம்பெனியின் தரமும் திறனும் புரியும்.
நெட்வொர்க் இருக்கிறதா?
  இந்தியா முழுவதுமாக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் டீலர்களையும் 5 ரீஜினல் ஆபீஸ்களையும் வைத்து தொழிலைத் திறம்பட வளர்த்து வருகிறது இந்நிறுவனம்.
புதிய செக்மென்டுகள் ஏதும் செயல்படுகின்றதா?
இரண்டாண்டு காலமாக சிறிய டிராக்டர்களையும் உற்பத்தி செய்வதோடு  விற்பனையும் செய்து வருகிறது. ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே இப்போது சிறிய டிராக்டர்கள் விற்கப்பட்டு வருகிறது.
வருகின்ற நிதியாண்டில் பஞ்சாபின் சில பகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலும் விற்பனையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் நிதியாண்டில் 7,500 சிறிய டிராக் டர்களை விற்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
கெப்பாசிட்டி எக்ஸ்பான்சன் உண்டா?
மொபைல் கிரேன் செக்மென்டில் லீடராக இருப்பதால் எப்போதுமே இதன் கிரேன்களை புக் செய்தே பெறவேண்டியுள்ளது. மாதத்திற்கு 575 கிரேன்கள் தேவையிருக்கிறது. ஆனால், இந்நிறுவனத்தால்  400 கிரேன்களை மட்டுமே செய்ய முடிகிறது. இதனால்
ஆர்டர் புக் எப்போதுமே ஃபுல்லாக இருக்கிறது.  இதுபோல் தொடர்ந்து ஆர்டர் புக் ஃபுல்லாக இருப்பதும், தாமதமாக டெலிவரி செய்வதும் போட்டியாளர்களை வளரவைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ள இந்நிறுவனம்  கெப்பாசிட்டியை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
உத்தராஞ்சலில் ஒரு புதிய கிரேன் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நிறுவியுள்ளது. இந்த புதிய கிரேன் உற்பத்தி தொழிற் சாலையின் முதல்படி ஏப்ரல் 2011 நிறைவில் நிலைபெற்றுவிடும் என எதிர்பார்க்கலாம். அப்படி நிலைபெற்றால் தற்போதிருக்கும் கெப்பாசிட்டியான 400-லிருந்து 550 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அடுத்த ஏப்ரலில் மாதாந்திர கெப்பாசிட்டி 750 வரை அதிகரிக்கும்.
எதிர்காலம் எப்படி?
இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் கீழே வரும் கட்டுமானம், ரோடுகள், ரயில்வே, துறைமுகங்கள், ஆயில் மற்றும் கேஸ், ராணுவம் என அத்தனை ஏரியாக்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகிய இந்தியா, அதிக அளவில் முன்னேற்றத்துக்காக பொருட் செலவு செய்யவிருக்கிறது. அதனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை ஏரியாக்களிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நிச்சயம் தேவைப்படும். பெரியதொரு மார்க்கெட் லீடராக இருப்பதால் குறிப்பிட்டுள்ள துறைகளின் வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடாக இந்நிறுவனமும் வளரும். விவசாயத் துறையிலும் டிராக்டர் உற்பத்தி மூலம் கால்பதிப்பதால் அரசாங்கத்தின் கவனம் அதிகம் உள்ள விவசாயம் சார்ந்த டிராக்டர் விற்பனையும் அதிகரித்து லாபத்தை உயர்த்தும் என்பதில் ஐயமேதுமில்லை.
மேலும் கட்டுமானத்துறையில் இதுநாள்வரை பெரிய அளவில் உபகரணங்கள் (கிரேன், மிக்ஸர் போன்றவை) உபயோகப் படுத்தப்படவில்லை.  வேகமான வளர்ச்சிகாணும் பொருளா தாரத்தால், இனிவரும் காலத்தில் கட்டுமானத்துறையில் கூலி வேலைக்கு ஆள் கிடைக்கும் வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கும். எனவே, கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட முழு வாய்ப்பு உள்ளது. இதனாலும் இந்நிறுவனத்துக்கு பெரியளவில்  நன்மை ஏற்படும். நகரமயமாதலும் அதனால் ஏற்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தேவைகளும் ஏஸின் வளர்ச்சியை வேகமாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது. மெட்டல் மற்றும் எனர்ஜியின் தேவை
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதாலும் சுரங்கத் துறைக்கு தேவையான இயந்திரங் களின் தேவையும் அதிகரித்துக் கொண்டேதான் போகும். 
இவ்வாறு ஏஸ் சம்பந்தப்பட் டுள்ள அத்தனை தொழில்களுமே இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதைப் போலவே தோன்றுகிறது. எனவே, அந்தத் துறைகளுக்கான இயந்திரங்களை சப்ளை செய்யும் ஏஸும் அவற்றுடன் சேர்ந்து வளரத்தான் செய்யும்.
என்ன ரிஸ்க்?
திடீரென வட்டி விகிதங்கள் வேகமாக மேலே சென்றால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனிகள் தங்களுடைய நடவடிக்கைகளை தள்ளிப் போடலாம். அப்படித் தள்ளிப்போடும்போது ஏஸின் வருமானம் ஓரளவிற்கு குறையலாம்.
ஏதாவதொரு காரணத்தால் உலகப் பொருளாதார சூழல் திடீரென மீண்டும் கீழே போனாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் செக்டாரில் பெரிய அளவில் தொய்வு விழ வாய்ப் புள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு துறையையும் சார்ந் திருக்கும் ஏஸின் லாபம் நன்றாகவே குறையலாம்.
ஏன் இந்த ஷேரை வாங்க வேண்டும்?
இந்த துறையில் இரண்டு   மேஜர் பிளேயர்கள் மட்டுமே  இருப்பதால் வளர்ச்சி நிச்சயம், அதனால் போட்டியும் குறைவு. 2011-12-ன் ஜி.டி.பி. எதிர்பார்ப்பான 8-9 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டாலே பெரிய அளவில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொபைல் கிரேன்கள் லாரி/கார் போன்ற வாகனங்களுக்கு சமமான ஒன்றாகும். நாளாக நாளாக மாற்ற வேண்டிய ஒரு மெக்கானிக்கல் விஷயம்.
எனவே, புதிய விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையும், நாளாக நாளாக ரீப்ளேஸ்மென்ட் சேல்ஸும் இந்த கம்பெனிக்கு நன்றாகவே கைகொடுக்கும். எனவே, வாசகர்கள் இந்த கம்பெனியை இரண்டாண்டு கால முதலீட்டிற்காக ரூபாய் 80 வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இன்றைய விலையான 47 ரேஞ்சில் முதலீடு செய்யலாம் என்பதே நம் கருத்து.
-நாணயம் டீம்  

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 20

முதற்படி முதலில் படி!

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சென்ற வாரம் பி/இ பற்றிக் கண்டோம். இந்த வாரம் மற்றொரு முக்கியமான அளவுகோலான புத்தக மதிப்பு மற்றும் அதன் விகிதமான H/HM (P/BV)  பற்றிக் காண்போம்.


புத்தக மதிப்பு என்றால் என்ன?
பங்குச் சந்தையில் ஈடுபட்டி ருக்கும் அனைவரும் பல வகையான குறியீடுகளைப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கப் போகும் பங்குகளைத் தேர்வு செய்கின்றனர். அவற்றினுள் அதிகமாகப் பேசப்படும் ஒரு குறியீடுதான் புத்தக மதிப்பு. இந்த தலைப்பிற்குள் விரிவாகச் செல்லும்முன்னர் புத்தக மதிப்பு என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு
நிறுவனத்தின் சொத்து மதிப்பி லிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம்.
இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும். ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாக கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும்.
மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத் தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.
என்ன இது - சுலபம் என்று கூறிவிட்டு கழித்தல், வகுத்தல் எல்லாம் செய்யச் சொல்கிறாரே என்று கவலைப்பட வேண்டாம். பல ஃபைனான்ஷியல் இணைய தளங்கள், ஒரு பங்கின் புத்தக மதிப்பு மற்றும் பி/பிவி போன்ற விகிதங்களை ரெடிமேடாக கொடுக்கின்றன. ஆகவே, அவற் றைக் கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்க்கத் தெரிந்து கொண்டாலே போதும்.
சந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்

புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதைத் தனியாக காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த விகிதம்தான் பரவலாக உபயோகிக் கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் (Market Price/ Book Value or P/BV). இந்த விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப்போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும். பொதுவாக இவ்விகிதம் குறைவாக இருப்பது, முதலீட்டாளர்களுக்கு நல்லது. இதை நாம் பி/பிவி விகிதம் என்று எடுத்துக் கொள்வோம். இந்த விகிதமானது மதிப்பு குறைவாக சந்தையில் விற்பனையாகும் பங்குகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பழைய பொருளாதார நிறுவனங்கள் அனைத்தையும் ஆராய்வதற்கு இது ஒரு சிறந்த குறியீடாகும். மற்ற பி/இ போன்ற விகிதங்கள் அக்கவுன்டிங் மாறுபாடுகளினால் ஒவ்வொரு நாட்டிற்கும் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால், புத்தக மதிப்பு என்பது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே, பி/பிவி ஒரு சமமான அளவுகோல் ஆகும். இரண்டாவதாக முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வதற்கும், பங்குகளை சுலபமாக ஒப்பிடு வதற்கும் இந்த விகிதம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒரு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய இடங்களையும், கட்டடங்களையும் அன்றைய விலையிலேயே இன்றும் காண் பித்துக் கொண்டிருக்கும். ஆகவே, அதன் இன்றைய புத்தக மதிப்பு அதிகமாக இருந்த போதிலும், ஐந்தொகையில் (Balance Sheet) குறைவாகக் காணப்படலாம்.  அதேபோல் அதன் ஆர்.ஓ.இ. (ROE) என்று சொல்லக் கூடிய பங்கு மூலதனத்திலிருந்து வரும் வருமானம் மிக அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பங்குகள் குறைந்த பி/பிவி-யில் கிடைத்தால் மதிப்பைப் பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு (Value Investorss) அது ஒரு வரப்பிரசாதம்.
இதே கூற்று நேர்மாறாக இருப்பதும் உண்டு. ஒரு கம்பெனியின் பங்கு அதன் புத்தக மதிப்பைவிட குறைவாக சந்தையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1) கம்பெனி அதன் சொத்துக்களின் மதிப்பை அதிகமாக காட்டியிருக்கிறது என்று சந்தை ஊகிப்பது.
2) கம்பெனிக்கு அதன் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் குறைவாக அல்லது நெகடிவ்வாக கூட இருப்பது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

சந்தை விலை/ புத்தக மதிப்பு விகிதத்தின் அசௌகரியங்கள்.
எந்த ஒரு விகிதத்திற்கும் நன்மை தீமைகள் இருப்பதுபோல, பி/பிவி விகிதத்திற்கும் சில அசௌகரியங்கள் உள்ளன. புத்தக மதிப்பு எம்மாதிரியான நிறுவனங் களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும்? - கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று ஆங்கிலத்தில் கூறக்கூடிய முதலீடு அதிகம் தேவைப்படக் கூடிய தொழில்களுக்குத்தான் புத்தக மதிப்பு அதிகமாக இருக்கும். இதுபோன்ற தொழில்கள் பெரும்பாலும் உற்பத்தித்துறை, உலோகத்துறை, நிதித்துறை, மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றைச் சார்ந்தவையாக இருக்கும். எந்த ஒரு நிறுவனத் திற்கும் காணக்கூடிய மற்றும் காணமுடியாத சொத்துக்கள் (Tangible & Intagible Assets) என இரு வகையான சொத்துக்கள் இருக்கும். காணக்கூடிய சொத்துக்கள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று - உபகரணங்கள், கட்டடங்கள், கருவிகள், மற்றும் பிற முதலீடுகள். ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அந்நிறுவனங்களின் மூலதனமே அவர்களின் ஊழியர்கள்தான் - ஊழியர்களின் மூளைதான்.
அதேபோல் பிராண்ட் மதிப்பும் (Brand Value) பல நிறுவனங் களுக்கும் அவர்கள் விற்கும் பொருட்களுக்கும் முக்கிய மானதாக உள்ளது. பிராண்டை மதிப்புள்ளதாக ஆக்குவதற்கு அந்நிறுவனங்கள் பெருவாரியாகச் செலவு செய்கின்றன. இதுபோல் இன்னும் பலப்பல காண முடியாத சொத்துக்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உள்ளன.
அவற்றையெல்லாம் நமது ஐந்தொகை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தக் காணமுடியாத சொத்துக்களை சந்தை மதிப்பில் எடுத்துக் கொள்வதால் அப்பங்குகளின் விலை புத்தக மதிப்பைவிட பல மடங்கு  அதிகமாக இருக்கும். ஆகவே, இதுபோன்ற நிறுவனங் களுக்கு பி/பிவி-யும் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளைப் தேர்ந்தெடுக்கும்போது துறை வாரியாக பி/பிவி-யை பார்த்து, அத்துறைக்குள் பங்குகளை ஒப்பிடுவது நன்மை பயக்கும்.
உதாரணத்திற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பி/பிவி 8.41 ஆகும். ஹிந்துஸ்தான் யூனிலீவரின் பி/பிவி 23.13 ஆகும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சன் பார்மா ரிஸர்ச்சின் பி/பிவி 111.99 ஆகும். அதே எதிர்பகுதியில் உள்ள நிறுவனங்களைப் பார்க்கும்போது மிகவும் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு ஷிப்பிங் கார்ப்பரேஷனின் பி/பிவி 0.85 ஆகும். அதேபோல் ஜி.இ. ஷிப்பிங்கின் பி/பிவி 0.80 ஆகும். சிண்டிகேட் பேங்கின் பி/பிவி 1.22 ஆகும்.
மேலும், லாபத்தில் இல்லாத பல நிறுவனங்களின் சந்தை விலை குறைவாக இருக்கும். ஆனால், அவற்றின் முடங்கிக்கிடக்கும் முதலீடு அதிகமாக இருக்கும். ஆகவே, அவற்றின் புத்தக மதிப்பு அதிகமாகக் காணப்படும். பொதுவாக அதுபோன்ற பங்குகளில் இருந்து விலகி இருப்பது நன்று.
இன்னும் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம்... உங்கள் ஊரில் நீங்கள் ஒரு சூப்பர்மார்க்கெட் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள். அதே ஊரில் இருக்கும் சூர்யா சூப்பர்மார்க்கெட் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று விலைக்கு வருகிறது. உங்களுக்கோ, அக்கடைக்காரர் சரியாக மார்க்கெட்டிங் செய்யாததால் தான் வியாபாரம் சரியாக நடக்க வில்லை என்று அழுத்தமான நம்பிக்கை. நீங்கள் புதிதாக ஆரம்பித்தால் தளவாடச் சாமான்களுக்கான செலவு சுமார் 5 லட்சம் ஆகும். அதேபோல் தளவாடச் சாமான்கள் உள்ள அந்த கடைக்காரர் கேட்கும் விலையோ ரூ 3 லட்சம்தான். நீங்களும் விலை சாதகமாக உள்ளது என்று அக்கடையை வாங்கிவிடுகிறீர்கள்  ரூ. 3 லட்சம் கொடுத்து! சொல்லப்போனால உங்களுக்கு நல்ல டீல் கிடைத்துள்ளது. சூர்யா சூப்பர் மார்க்கெட்டின் புத்தக மதிப்பு 5 லட்சம். அதன் மார்க்கெட் விலையோ 3 லட்சம். ஆக அதன் பி/பிவி 0.6 (3/5 = 0.6) ஆகும். இதைப்போல் பல பங்குகள், தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும் தனது புத்தக மதிப்பிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன! முதலீட்டாளராகிய உங்களின் வேலை அப்பங்குகளை தேடிக் கண்டுபிடிப்பதுதான்! கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பங்குகள் வேறுபல அளவுகோல்களிலும் ஒத்துவருகிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine